சமீபத்தில் ஆண்டிகுவாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிய மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப், கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாய் சண்டையில் ஈடுபட்டார்.
கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்சாரி ஜோசப் கோபத்தில் அந்தப் போட்டியின் நான்காவது ஓவர் வீசப்பட்ட போது, மைதானத்தை விட்டு வெளியேறினார். இதை பார்த்த வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஆறாவது ஓவரின் போது மீண்டும் அவர் களத்துக்கு வந்தார்.
அதனால், ஐந்தாவது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆடியது. என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்குதே என்றே பல ரசிகர்கள் இந்த சம்பவத்தை பார்த்தனர். கிரிக்கெட் ரசிகர்கள் அல்சாரி ஜோசப்பின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து, வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியம் அல்சாரி ஜோசப்புக்கு இரு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெஸ்ட் இண்டீஸ் அமைப்பின் நன்மதிப்புகளை காக்கும் வகையில் அவர் நடந்து கொள்ளவில்லை. இது போன்ற மோசமான நடவடிக்கையை நாம் அப்படியே விட்டுவிட முடியாது . அந்த சம்பவதம் நடந்த விதத்தை உணர்ந்து அவருக்கு இரண்டு போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்சாரி ஜோசப்பும் தனது நடத்தைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அறிக்கையில், “நான் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் சக வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டேன். அணி நிர்வாகத்திடமும் மன்னிப்பு கேட்டேன். வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களிடமும் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்