திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. Spoiled Beef food Hotel Bilal sealed
சென்னை திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் முதல் கடையாக ஹோட்டல் பிலால் உள்ளது. இங்கு ரம்ஜானுக்கு முதல் நாளான மார்ச் 30ஆம் தேதியன்று பீப் சாப்பிட்ட 20க்கும் அதிகமானோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
வாந்தி, மயக்கம், ஃபுட் பாய்சன் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதியடைந்த அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த உணவகத்துக்கு முன்னால் திரண்டு முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பிலால் பிரியாணி உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 2) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உணவகத்தின் உரிமையாளரோ, ஊழியர்களோ யாரும் உணவகத்தில் இல்லை. அவர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டும் போன் எடுக்கவில்லை.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருவல்லிக்கேணி பிலால் உணவகத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், “இந்த கடையை வழக்கமாக பிற்பகல் ஒரு மணிக்குதான் திறப்பார்கள். எனவே ஒரு மணிக்கு பிறகு சோதனைக்கு வந்தோம். ஆனால் கடையை மூடிவிட்டு போய்விட்டார்கள். அதனால் காவல்துறை உதவியுடன் கடைக்கு சீல் வைத்தோம். இனி எங்கள் அனுமதி இல்லாமல் கடையை திறக்கக் கூடாது.
கடை உரிமையாளர்களையும், ஊழியர்களையும் ட்ரேஸ் செய்யவுள்ளோம். இந்த பூட்டை உடைத்தால் கிரிமினல் குற்றமாக கருதப்படும்.
பொதுமக்களுக்கு எதாவது ஒன்று என்றால் நான் விடமாட்டேன். அவ்வளவு சீக்கிரம் இந்த கடையை திறக்கவிடமாட்டேன்” என்று கூறினார். Spoiled Beef food Hotel Bilal sealed
