குடிமக்கள் தனிப்பட்ட நன்மைக்காக அல்லாமல் பொது நன்மைக்காக செயல்பட உதவும் தார்மீக அர்ப்பணிப்பு அவசியம். நீதிமன்றங்களில் நவீன தொழில் நுட்பங்களை கையாள்வதன் மூலம் வழக்குகள் தேங்குவதை குறைக்க முடியும் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனியில் உள்ள கங்கா மருத்துவமனையில் நேற்று (நவம்பர் 22) நிறுவனர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் 11 ஆவது நிறுவனர் தின விழா நினைவு பரிசை மருத்துவமனையின் தலைவர் கனகவல்லி சண்முகநாதன் வழங்க நீதிபதி சந்திரசூட் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டம், குடிமக்கள் மனப்பான்மை மற்றும் சமூக நல்லொழுக்கம் நாட்டிற்கான ஒரு தார்மீக வழிகாட்டி என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்திரசூட் பேசினார்.
நீதிபதி தனது உரையில், “இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டில் நாம் பேசும் போது நிறுவனங்கள் மற்றும் கோட்பாடுகள் பற்றி மட்டுமல்ல.. அன்றாட வாழ்க்கையில் நாட்டின் லட்சியங்களை, அர்த்தமுள்ளதாக்கும் மதிப்புகள், மனநிலைகள் மற்றும் குடிமைப் பழக்கவழக்கங்கள் பற்றியும் பேச வேண்டும்.
குடிமக்கள் தனிப்பட்ட நன்மைக்காக அல்லாமல் பொது நன்மைக்காக செயல்பட உதவும் தார்மீக அர்ப்பணிப்பு அவசியம்.
கொரோனா காலத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்தி மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. தற்போது ஏஐ போன்ற ஏராளமான நவீன தொழில் நுட்பங்கள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனால் நீதிமன்றங்களில் நவீன தொழில் நுட்பங்களை முறையாக கையாளுவதன் மூலம் வழக்குகள் தேங்குவதை பெருமளவு குறைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
