ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
நெல்லை கவின் ஜாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவை என்ற குரல் வலுத்து வருகிறது. ஆளும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் மனு அளித்தன.
இந்த நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை; ஆகையால் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வகை செய்யும் தனிச் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
