தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் பலன்களை வழங்கும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக ரூ.2,446 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், 2026-2027-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான இன்று, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 6,867 பேருக்கு சிறப்பு பலன்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்பு, பணிக்கொடை போன்றவற்றுக்காக ரூ.2,446 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
