திருமணமாகாத இளைஞர்கள் அக்னி வீரர்கள் திட்டத்தில் சேர்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் செப்டம்பர் 2மற்றும் 3ம் தேதி நடைபெற உள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று (ஆகஸ்ட் 11)அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்வு தேதிகள்
தமிழ்நாடு, ஏனாம் பகுதி உள்ளிட்ட புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 02, 03-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 27, 28-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வரும் ஆகஸ்ட் 30,31-ம் தேதிகளில் நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் வரும் செப்டம்பர் 5, 6-ம் தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
தேர்வு மையம்: இதற்கான தேர்வு சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெறும்.
வயது வரம்பு : 2005 ஜனவரி 01 முதல் 2008 ஜூலை 01-க்குள் பிறந்தவர்கள் இந்த தேர்வு முகாமில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச பாடத் திட்டங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இதில் கலந்து கொள்வதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இயந்திரவியல், மின்னணுவியல், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் 3 ஆண்டு பட்டயம் பெற்றவர்களும் இத்தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
