மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

கானகம் அளந்த ராம காதையும், கண்ணபிரானின் பாஞ்சஜன்யம் ஒலித்த மகாபாரதமும் இந்த மண்ணில் நிகழ்ந்த உண்மை வரலாறே என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

அல்ல, அல்ல… அவை மொத்தமும் புனையப்பட்ட கதைகளே என்று எதிர்வாதம் செய்து மறுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். இரண்டில், எதுதான் உண்மை?

ராமர் கிமு 5114இல் ஜனவரி மாதம் 10ஆம் தேதி பிறந்தார் என்று சிலர் கணிக்கிறார்கள். அதாவது, இன்று தொடங்கி கூடக்குறைய 7000 ஆண்டுகளுக்கு முன்பு என்கிறார்கள். போலவே, கிருஷ்ணர் பிறந்தது கிமு 3078 என்றும் கணிக்கிறார்கள். இது, கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம். இதெல்லாம் உண்மைதானா? இந்தப் பஞ்சாயத்தை யார்தான் தீர்த்து வைப்பது?

‘யாரும் வந்து தீர்க்கத் தேவையில்லை. நம்மாலேயே அதை நேரில் கண்டு கொள்ள முடியும்’ என்கிறார் பாரதியார்.

எதை? ராமாயண – மகாபாரதத்தையா? நேரில் கண்கொண்டு பார்ப்பதா? ஆம், ஏன் காண முடியாது. ‘வாய்ப்பு ஒன்று இருக்கலாமே’ என்கிறார் எட்டயபுரத்தார்.

‘அதீதமாக உணர்ந்தோதும்’ வல்லமை அந்த மகாகவியிடம் உண்டு என்பதைப் பல பக்கங்களில் உணர்ந்தவன் நான். ஆகவே, அவர் சொன்னால் அதில் ஏதேனும் ஆழ்ந்த பொருள் இருந்தாக வேண்டும் என்று என் உள் மனம் அடித்துக்கொண்டே இருக்கிறது. அவரது கூற்றை நம்ப மனம் விரும்புகிறது. ‘புதியன விரும்பு’ என்று ஆத்திச்சூடியில் அறிவுறுத்தியவரல்லவா? சரி, அவரை நம்பலாமா?

ஆரம்பத்தில், நானும்கூட பாரதியின் கவித்துவத்தை மட்டும்தான் கொண்டாடி வந்திருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் கடந்து, நம்மால் சாதாரணமாக கண்டு உணர முடியாதனவற்றை எல்லாம் ‘அதீதமாக உணர்ந்தோதும் வல்லமை’ பெற்றதாக அவரது படைப்புகள் இருக்கின்றன என்பதை ஆழ்ந்து படிக்கப் படிக்கத்தான் உணர்ந்துகொண்டேன். அதைக் கொஞ்சம் விளக்க முயல்கிறேன்.

அதாவது, இந்திய விடுதலைக்குப் பல்லாண்டுகள் முன்னரே…

‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்று எழுதிச் சொன்னவர் பாரதி மகான் என்றெல்லாம் நான் நீட்டி முழக்கினால், இந்தக் கட்டுரையை “அட, இது வெறும் பட்டிமன்றப் பேச்சு போல…” என்று மின்னம்பலத்தின் வாசகர்கள் புறந்தள்ளி விடக்கூடும்.

ஆனால், இந்த சாதாரணத்தையெல்லாம் சரித்துக் கடந்து, பற்பல படிகள் மேலேறி உயர்ந்து நிற்பவர் அந்த முறுக்கு மீசைக்காரர்.

**எப்படி? பார்ப்போம்…**

‘காக்கை சிறகினிலே நந்தலாலா…’ என்னும் பாரதியாரின் பாடலை நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? அந்தப் பாடலில் இவ்வாறு சொல்கிறார்…

‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா!’

கவனிக்க வேண்டும்… ‘தீயில் விரலை வைத்தால்’ என்று அவர் சொல்லவில்லை. ‘தீமேல் விரலை வைத்தால்’ என்றும் சொல்லவில்லை. மாறாக, ‘தீக்கு உள்’ விரலை வைத்தால் என்கிறார். ஆம், தீயின் நட்ட நடுவை – அதன் மையத்தை குறிக்கிறார்.

தீயின் மையத்தில் விரலை வைத்தால் என்னவாகும்? குளிரும்! ஆம், மார்கழியின் நடு ராத்திரி போல உறையக் குளிரும். இதனை பாரதியார் உணர்ந்தோதிய காலம் 1920-க்கும் முற்பட்டது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.

ஆச்சர்யம் என்னவென்றால், பாரதி அவ்வாறு எழுதி முடித்து, திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் எரிந்து சாம்பலாகிப் போனதன் பின், பல பத்தாண்டுகள் கழித்து, மேற்கு உலகத்தின் அறிவியலாளர் “Dr.WEST” என்பவர் நவீன டெலஸ்கோப்புகளின் உதவியோடு சூரியனை நெருங்கி ஆராய்ந்து ஒரு தியரியை கண்டு சொன்னார்.

வேறொன்றுமில்லை, “சூரியனின் நடு மையம் உறைந்து குளிர்ந்து இருக்கும்”.

சொல்லுங்கள், பாரதியை வியக்காமல் இருக்க முடியுமா? அவரது “அதீதமாக உணர்ந்தோதுதல்” தன்மையை எண்ணி மயங்காமல் இருக்க முடியுமா? அதனால்தான் துணிந்து சொல்கிறேன்… அவரது படைப்புக்கள் அதீதமானவை, ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வேண்டியவை என்று.

இப்போது, கட்டுரையின் மையக் கருத்துக்குள் செல்வோம்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம், ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர் என்கிறார்கள் அறிவியலாளர்கள். PERIHELION – APHELION என்று நவீனப்படுத்திய வகையில் ஏறக்குறைய இருந்தாலும், கிட்டத்தட்ட தூரம் ஒன்றுதான்.

அது போகட்டும். அவர்களின் கணக்குப்படி சூரியனுக்கும் அப்பால் இருக்கும் பூமிக்கு சமீபமான நட்சத்திரம், நாம் வாழும் பூமிக்கு 4.3 ஒளி வருட தூரத்தில் இருக்கிறதாம். ஒரு ஒளி வருடம் என்பது 10 ட்ரில்லியன் கிலோமீட்டர்.

நமக்கும் சூரியனுக்கும் இடைப்பட தூரம் வெறும் 150 மில்லியன். மில்லியனுக்குப் பிறகு பில்லியன். பில்லியனுக்கு பிறகு ட்ரில்லியன். ஒரு ஒளி வருடம் என்பது 10 ட்ரில்லியன் கிலோமீட்டர் என்றால், 4.3 ஒளி வருடம்?

தலை சுத்துகிறதல்லவா? ஆனால், சென்ற நூற்றாண்டு உலகத்தின் ஒரே மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு அன்று தலைச்சுற்றவில்லை.

ஓர் ஏழைக் கவிஞனாக, ஒட்டிக் காய்ந்த வயிறோடு திருவல்லிக்கேணி மண்ணில் வானம் பார்த்து மல்லாந்து படுத்துக் கொண்டிருந்தவன், தூரத்தில் “கண் சிமிட்டும்” நட்சத்திரக் கூட்டத்தை அடித்துப் பார்த்துக்கொண்டே இருந்து, சடாரென்று எழுந்து எழுதிப் போன வரிகள்தான்…

காண்பவெல்லாம் மறையுமென்றால்

மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?

இந்தக் கட்டுரையை எழுத என்னைத் தூண்டியது இந்த இரண்டு வரிகள்தான். ஆயிரங்காலத்து அறிவியல் பார்வை அதில் ஆழப் பொதிந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆம், அதீதமாக உணர்ந்தோதும் பாரதியின் தன்மை என்னை இன்னுமின்னும் நம்பச் சொல்கிறது.

சிந்திப்போம்.

இரவில் நட்சத்திரங்கள் மினுக்குவதை நாம் ரசித்துக் காண்கிறோம் அல்லவா? ஆனால், அவை அங்கே அப்படி சுகமாக இருக்கவில்லை.

உண்மையில், பூமிக்கு வெகு கோடி ஒளி மைல்கள் தூரத்தில் அவைகளெல்லாம் படு பயங்கரமாக அங்கே கொழுந்துவிட்டு அலறி எரிந்து கொண்டிருக்கின்றன.

எரியும் அந்த மகா ஜ்வாலையின் ஒளிதான் பூமியில் இருக்கும் நமக்குத் தென்படுகிறது. அந்த மகா நெருப்பின் ஒளி ஆகப்பட்டது பூமியில் வாழும் நமக்குத் தெரிவதற்கு முன்னர் பற்பல தடைகளைக் கடந்தே வருகிறது.

ஆம், அண்டவெளியில் பிரமாண்டமான “கருங்குழிகள்” (Black Hole) ஏராளமாக உள்ளன. இதன் சுற்று அளவு கணக்கிடவியலாதது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அவைகளில், “ஒளியை விழுங்கும்” கருங்குழிகளும் உண்டு, “சாதாரண கருங்குழிகளும்” உண்டு.

அப்படிப்பட்டவைகளை எல்லாம் புகுந்து பின் கடந்து, மீண்டும் உள் புகுந்து பின் கடந்தபடியே பூமியை நோக்கி வந்து கொண்டியிருப்பதால்தான் நட்சத்திரங்கள் எரியும் அந்த மகா நெருப்பு நமக்கு மினுக்குவதைப் போன்றதோர் தோற்றத்தை அளிக்கின்றன.

இதுகுறித்து, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூத்த வானவியலாளர் Alan Dressler என்பவர் நீண்ட ஆய்வுகளை செய்து தந்திருக்கிறார். அவரது, இரண்டு புத்தகங்களும் இது குறித்த பொக்கிஷங்கள்.

அப்படியாக, அண்டவெளியில் கொழுந்துவிட்டு எரியும் அந்த மகா நெருப்பின் ஒளி அங்கிருந்து புறப்பட்டு இடைப்பட்ட மகா கருங்குழிகளையெல்லாம் கடந்து, நாம் வாழும் இந்த பூமிக்கு வந்தடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு எவ்வளவு தெரியுமா? பல பில்லியன் வருடங்கள் என்கிறார். இப்போது பாரதியிடம் வருவோம்.

தயவுசெய்து கூர்ந்து கவனியுங்கள். பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அண்டவெளியில் ஓர் நட்சத்திரத்திடமிருந்து வெளிப்பட்ட ஒளியை, பூமியில் இருந்து கொண்டு இப்போது நம்மால் காண முடியும் என்றால்…

ஒருவேளை, அந்த நட்சத்திர கூட்டங்களுக்கு நடுவே நம்மால் சென்று விட முடிந்து விட்டால்? பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இந்தப் பூமியில் நிகழ்ந்தவைகளையும்கூட கண்டுவிட முடியும் அல்லவா?

அண்டவெளியில் இருந்து முந்தைய காலத்தில் புறப்பட்ட ஓர் வஸ்து இன்று நம்மை வந்து சந்தித்துவிட முடியுமென்றால், அந்த வஸ்துவின் இடத்தில் நாம் சென்று நின்று கொண்டுவிட முடிந்தால் முந்தைய பூமியையும் பார்க்க முடியும் அல்லவா?

அப்படி, பில்லியன் வருடங்கள் எல்லாம் வேண்டாம், சற்றே 7000 வருடங்களுக்குப் போதுமான உயரத்தில் நம்மால் சென்றுகொள்ள முடியும் என்றால், இங்கே நிகழ்ந்த ராமாயணத்தையும், மகாபாரதப் போர்க்களத்தையும், புத்தரின் அரண்மனை நீங்கு படலத்தையும், கண்ணகி சிலம்பெறிந்த காட்சிகளையும் கூட லைவ்வாக நாம் கண்டு கொள்ள முடியுமே.

காண்பவெல்லாம் மறையுமென்றால்

மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ ?

எல்லாம் சரி, எப்படி நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே நம்மால் பயணித்துப் போக முடியும்? எப்படி அங்கே நின்றுகொண்டு, நமது பழம் பூமியைக் காண முடியும்? அதற்கு உரிய வேக வாகனம் நம்மிடம் உண்டா?

அதற்கு என்னதான் செய்ய வேண்டும்? அறிவியல் உலகம் வெகு, வெகுவாக முன்னேறியாக வேண்டுமா அல்லது, பாரதியாரைத்தான் மீண்டும் எழுப்பிக் கேட்க வேண்டுமா?

இந்த மண்ணில் வாழ்ந்த இன்னொரு மகாகவியான பத்ரகிரியார், அவரது “மெய்ஞானப் புலம்பலில்” இவ்வாறு சொல்கிறார்.

பிறப்பும் இறப்பும் அற்றுப்

பேச்சும் அற்று மூச்சும் அற்று

மறப்பும் நினைப்பும் அற்று

மாண்டிருப்பது எக்காலம்?

ஒருவேளை, இப்படி இருக்கத் தெரிந்து கொள்ளும்போதுதான், அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமோ என்னவோ!?

மகாகவிகளுக்கே வெளிச்சம்!

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா…

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share