சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
எனினும் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை சேகரித்தால் மீண்டும் வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை அமல்படுத்தவில்லை எனக் கூறி புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், “முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிப்பட்டுள்ளதால், அவர் மீது வழக்கு தொடர சபநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார். அதே வேளையில் ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி, விஜய் கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனையடுத்து ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98 கோடி முறைகேடு வழக்கில் மீண்டும் எஸ்.பி. வேலுமணியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
