சென்னை மாநகராட்சி சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜுன் 7) உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மாநகராட்சியில் 2018 – 2019 காலகட்டத்தில் சாலைகள் சீரமைக்க ரூ.300 கோடி மதிப்பிலும், மழைநீர் வடிகால் கட்டமைப்பிற்கு ரூ.290 கோடி மதிப்பிலும் 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த டெண்டர் முறைகேட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக, முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2020-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி,
“அறப்போர் இயக்கத்தின் புகார் தொடர்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டு விசாரணை முடிந்துவிட்டது.
இந்த ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அறப்போர் இயக்கம் புகார் தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,
“ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு தடை விதிக்க முடியாது.
ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில் அரசு மேல் நடவடிக்கையை தொடரலாம்” என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
”தரமில்லாத பொருட்களை வாங்கினால்…” -அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு
