வைபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தென் மாவட்ட சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார் என்ற பிளாஷ் செய்தி இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துக் கொண்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஆன ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி சென்னையில் இருந்து மாலை மதுரைக்குச் சென்றார். அன்று இரவு மதுரையில் பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை ஏர்போர்ட் அருகே உள்ள அம்பிகா ஹோட்டலில் தங்கினார்.

அந்த டி.எம்.எஸ்.சௌந்தர்ராஜன் சிலை திறப்பு விழாவில் மதுரையை சேர்ந்த அமைச்சர் பிடிஆர் கலந்து கொள்ளவில்லை. மலேசியாவில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சரின் அனுமதியோடு தான் மலேசியா சென்று இருப்பதாக தனது சமூகத்தளபக்கத்தில் தெரிவித்து இருந்தார் அமைச்சர் பிடிஆர். இது மட்டுமல்ல அடுத்த நாள் ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த தென் மண்டல பாக பொறுப்பாளர்கள் மாநாட்டிலும் பிடி ஆர் கலந்து கொள்ளவில்லை. இதைக் குறிப்பிட்டுச் சொல்லும் மதுரை திமுகவினர், ‘மாதங்களுக்கு முன்பு வெடித்த ஆடியோ சர்ச்சைக்கு பிறகு பி டி ஆர் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. அவரது நிதித்துறை அமைச்சர் பதவியும் மாற்றி தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமித்தார் ஸ்டாலின்.
இந்த நிலையில் தான் முதலமைச்சரே மதுரைக்கு வருகிற நேரமாக பார்த்து தனது மலேசியா நிகழ்ச்சியை காரணமாக வைத்து அங்கே சென்றுவிட்டார் பிடிஆர்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமநாதபுரத்தில் தென் மண்டல பாகப் பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பனும் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கமும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தை வளர்த்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டு பாராட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் கண்ணப்பன் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரை வைத்துக்கொண்டு, ‘போட்டி போட்டுகிட்டு மாவட்டத்தை வளர்க்கிறீங்கனு நான் பேசினத கேட்டீங்களா? அந்த மாதிரியே போட்டி போடுங்க’ என்று இருவரிடமும் தெரிவித்து இருக்கிறார் ஸ்டாலின். இந்த இருவருக்கும் இடையே தான் ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டே அவர்களிடம் அவ்வாறு கூறியுள்ளார் ஸ்டாலின்.
மறுநாள் ஆகஸ்ட் 18ஆம் தேதி மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரத்திலேயே தங்கினார் ஸ்டாலின். அப்போது விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் அவரவர் மாவட்ட விவகாரங்களை பற்றி சில நிமிடங்கள் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் முழுக்க முழுக்க வெற்றி பெற வேண்டியதற்கான அவசியத்தையும் அப்போது நிர்வாகிகளிடம் நேரிலும் எடுத்து சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
அங்கிருந்தபடியே உதயநிதியை ஃபோனில் தொடர்பு கொண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்க இருக்கிற நீட் விலக்கு தொடர்பான ஆளுநருக்கு எதிரான கண்டன உண்ணாவிரதம் குறித்தும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கேட்டிருக்கிறார் ஸ்டாலின்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
உண்ணாவிரத போராட்டம் : உதயநிதி போட்ட உத்தரவு!
முதல்முறை டாஸ்மாக் வருபவர்களுக்கு கவுன்சிலிங்: அமைச்சர் முத்துசாமி
