”அரசிற்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திருச்சபைகளின் பவள விழா சென்னை வானகரத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா தொடக்க விழாவில் கடந்த ஆண்டு நான் பேசினேன்.
இன்று நிறைவு விழாவில் கலந்துகொண்டுள்ளேன். நான் இல்லாமல் நீங்கள் இல்லை; நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்பதன் அடையாளமாக இந்த நிகழ்வு உள்ளது. நீங்கள் என்றைக்கும் என்னை அழைக்கத் தவறியதில்லை.

நானும் உங்கள் அழைப்பை மறுத்ததில்லை. பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் இலங்கையிலும் தென்னிந்திய திருச்சபை செயல்படுகிறது. 40 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
இதற்கு காரணம் ஒற்றுமை உணர்வுதான். ஒற்றுமை உணர்வுதான் நம்மை எப்போதும் என்றும் காப்பாற்றும். ஒற்றுமை எண்ணத்தோடு எல்லோரும் இருக்குமானால் நாடு அமைதி பூமியாக திகழும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமில்லை.
இந்தியா பல்வேறு மதத்தினர் வாழும் நாடாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம்; ஒற்றுமையாக வாழ்கிறோம்.
அவரவர் மதநம்பிக்கை அவரவர்களுக்கு சொந்தமானது. இது அடுத்தவர்களுக்கு எதிராக இருக்காது. இயேசு கிறிஸ்துவின் போதனையில் அன்புதான் மூலதனமாக இருந்தது.
எல்லா மனிதர்களும் சமம் என்பதுதான் சமத்துவம்; யாரையும் வேற்றுமையாக பார்க்காதது என்பதுதான் சகோதரத்துவம்.
அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை; ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம்.
அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடுவதுதான் தியாகம். உன்னிடம் இருப்பதை மற்றவருக்குக் கொடு.

இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இத்தகைய குணங்கள் ஒவ்வொருவருக்கும் இருந்தால், அதுதான் சமத்துவ நாடாக அமையும்.
இத்தகைய நோக்கம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். நாங்கள் என்பது உங்களுடைய அன்போடு, ஆதரவோடு நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.
பசித்த வயிறுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீர் ஆக திக்கற்றவர்களுக்கு திசையாக யாருமற்றவர்களுக்கு ஆதரவாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. அரசிற்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள்.
ஒரு கை உழைக்கவும் இன்னொரு கை உணவு ஊட்டும் அரசாகவும் செயல்பட்டு வருகிறோம். நாம் எப்போதும் ஒன்றிணைந்து நம்முடைய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஜாதி மதம் கடந்து பயணிக்க வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
3 பெண் அதிகாரிகள் : வண்ணாரப்பேட்டை சிறுமிக்கு கிடைத்த நீதி!
ஸ்ரீமதி பெற்றோர் ஒத்துழைக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி புகார்!
