டாஸ்மாக்கில் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. something happend in tasmac
மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகிய மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “நாங்கள் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தோம். டாஸ்மாக்கில் நடக்கும் மாமூல் குறித்தும் புகார் அளித்தோம். ஊடகங்களிடமும் பேட்டி அளித்தோம். இதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி எங்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்தது சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (மே 26)விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில், “மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றிய ராஜேஸ்வரியும், திருமங்கலம் டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணியாற்றிய செல்வமும் இணைந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தினமும் 5,000 ரூபாய் வசூல் செய்தனர்.
இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர்கள் புகார் அளித்தனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஊடகங்களில் பேட்டியளித்தனர்” என்ற வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, “மேலாளர் ராஜேஸ்வரியும், ஊழியர் செல்வமும் இணைந்து வசூல் வேட்டை நடத்தி இருக்கின்றனர். அவர்கள் பேசிய உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனுதாரர்கள் அனுப்பி இருக்கிறார்கள். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் ஊடகங்களுக்கு பேட்டியளித்து இருக்கின்றனர்.
இது டாஸ்மாக் விதிமுறைகளுக்கு எதிரானது என்றாலும் இதே நேரத்தில் மேலாளர் ராஜேஸ்வரி உடனடியாக அவர் பணிபுரிந்த துறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார். இதன்மூலம் ஏதோ நடக்கிறது என்பது தெரியவருகிறது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் இறப்புகளை தடுக்கவே அரசு டாஸ்மாக் நிறுவனத்தை நடத்துகிறது. எனவே, இந்த துறையில் ஊழல்களை அனுமதிக்க கூடாது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும்போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
டாஸ்மாக் துறை தனது தவறுகளை உணர வேண்டும்” என்று கூறி மனுதாரர்கள் மீது ஏற்கனவே எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே டாஸ்மாக் தலைமை நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது.
இது தொடர்பான வழக்கில் டாஸ்மாக் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. something happend in tasmac
