எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டத்துக்குள் நுழையாத அளவுக்கு அரசியல் தவறை செய்துவிட்டார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30) முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேவர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திக்கொண்டிருக்கும் போதே, வெளியில் குவிந்திருந்த ஒரு தரப்பினர் ஈபிஎஸ் ஒழிக என கோஷம் எழுப்பினர்.
துரோகி எடப்பாடி, சசிகலாவுக்கு துரோகம் செய்தவர், கடந்த ஆண்டு வராமல் இந்த ஆண்டு வருவது ஏன்?, எல்லாம் தேர்தலுக்காக… வெளியேறு, வெளியேறு… எடப்பாடி ஒழிக, என கோஷம் எழுப்பினர்.
தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, அந்த இடத்தில் இருந்து வெளியேறி, குளம் அருகே எடப்பாடி பழனிசாமி வாகனம் சென்று கொண்டிருந்த போது அவரது வாகனம் மீது கல், காலணி வீசப்பட்டதாகவும், ஆனால் அவை எடப்பாடி சென்ற காருக்கு முன் சென்ற கார் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
10.5% இடஒதுக்கீடு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு செய்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகவேல், பொதி குளத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகியோரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பசும்பொன்னில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”எடப்பாடி செய்த அரசியல் தவறுகளால் அவர் தென்மாவட்டங்களில் நுழைவதற்கே அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்று கூறி வன்னிய மக்களை ஏமாற்றினார். 10.5 இட ஒதுக்கீட்டால் கொதிப்படைந்த தென் தமிழக மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த நேரத்தில் அவர் எதற்காக வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை” என்று விமர்சித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
