பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிவராமன் ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என கிருஷ்ணகிரி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் முக்கிய நபராக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன், அப்பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் என 11 பேர் கைது செய்யபட்டனர்.
இதில் எலிபேஸ்ட் சாப்பிட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய குற்றவாளியான சிவராமன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போன்று சிவராமனின் தந்தை அசோக் குமாரும் குடிபோதையில் பைக்கில் இருந்து கீழே விழுந்து இன்று உயிரிழந்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான சிவராமன் மற்றும் அவரது தந்தை இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிவராமன் மரணம் குறித்து கிருஷ்ணகிரி காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
‘கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிவராமன் தப்பி ஓடியபோது எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சையின் பொழுது அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டது தெரியவந்தது.
மருத்துவர்களுடைய பரிந்துரையின் பேரில் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 21ம் தேதி சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து இரண்டு நாள் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இறந்திருக்கிறார்.
ஏற்கெனவே கடந்த ஜூலை 9ஆம் தேதி ’’குடும்ப பிரச்சனை காரணமாக எலி மருந்து சாப்பிட்டு அதற்காக சிகிச்சை பெற்று ஜூலை 17ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.
அதேபோல் இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்படுவதற்கு முன்பாகவும் இரண்டாவது முறையாக எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்’ என போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிவராமன் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான டிஸ்சார்ஜ் அறிக்கையும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஒலிம்பிக் தோல்விக்கு இப்படி ஒரு காரணம் சொல்லும் வீராங்கனையா? – மீராபாய் மீது பாயும் டாக்டர்
கற்றது தமிழ் படத்தை வாங்கி ரிலீஸ் செய்தேன், அந்த தைரியம் யாருக்கு வரும்? – கமலுடன் ஒப்பிட்ட கருணாஸ்