நடிகர் சூர்யா சினிமாவுக்கு வந்த பயணத்தை அவரது தந்தையும், நடிகருமான சிவக்குமார் பேசியது தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. sivakumar remember suriya entry in cineme at retro
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் வரும் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற ’கன்னிமா’ பாடல் ஹிட்டான நிலையில், ரெட்ரோ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.
அதில் பங்கேற்ற சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமார், ’தமிழ்சினிமாவில் முதன்முறையாக சிக்ஸ் பேக் வைத்த நடிகர் சூர்யா தான்’ என்று பெருமை பொங்க கூறினார்.
தொடர்ந்து சூர்யா சினிமாவுக்கு வந்த பயணத்தையும் சுவாரசியமாக விவரித்தார்.
அவர் கூறுகையில், “சூர்யாவுக்கு அப்போ 17 வயசு. ஸ்கூல்ல பைனல் இயர் படிச்சிட்டு இருந்தார். அப்போ ஒருமுறை என்னோட நண்பர் வீட்டுக்கு வந்தார். அவர் ஒரு ஜோசியர். சூர்யா மற்றும் கார்த்தியின் ஜாதகத்தை கேட்டுப் பார்த்தார். சூர்யா ஜாதகத்தைப் பார்த்து, ’இந்த பையன் கலைத்துறையில் பெரிய ஆளாக வருவான்’ என்றார்.
காலைல இருந்து சாயங்காலம் வரைக்கு மொத்தமே நாலு வார்த்தை பேசுவான். இப்படி எப்படி என்று, ’இயக்குநராக ஆவாரா? அல்லது கேமராமேன் ஆவாரா?’ எனக் கேட்டேன். ’இல்லை முகத்தை வைத்து பார்க்கும் வேலை’ என்றார். அப்போ நடிகனா வரப் போறானா என்று கேட்டேன். ஆமாம் சார், எனக் கூற, ’யோவ் லூசாய்யா நீ?’ என்று கேட்டேன்.
’அதுமட்டுமில்ல சார், உங்கள விட பெரிய நடிகரா பேர் வாங்குவாரு, நெறைய அவார்டு வாங்குவாரு. நெறய சம்பாதிருப்பாரு’ என்றார். அதுக்கப்புறம் அவரை போயிட்டு வாங்கனு அனுப்பி வச்சிட்டேன்.
சூர்யாகிட்ட சினிமா நடிப்பு பத்தி கேட்டேன். ஆனா அவருக்கு அதுல கொஞ்சம் கூட இஷ்டமே இல்ல.
அதன்பின்னர் இயக்குநர் வசந்த் ஒருமுறை விமான நிலையத்தில் சூர்யாவை பார்த்துவிட்டு, ரெண்டு நாள் கழித்து எனக்கு போன் செய்தார். அவர், ’சூர்யாவுக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை ஏதும் இருக்கிறதா?’னு கேட்டார். அவனுக்கு அப்படி ஏதும் ஆசை இல்லை என்றேன். ’இல்லை சார் அவர பாக்கனும்’ என்றார்.
அதன்படி ஒருநாள் காலை என் வீட்டுக்கு வந்தார். ’சூர்யாவிடம் நடிக்க ஆசை இருக்கா?’ என்று கேட்டார். ‘அய்யயோ… எனக்கு பயமா இருக்கு சார்’ என்றார். ’சினிமாவில் உங்க அப்பா 25 வருஷமா இருக்காரு. என்னயா பயம்?’னு திருப்பி கேட்டார்.
அதன்பின்னர் மூன்று நாள் கழித்து, மணி ரத்னம் தயாரிக்கும் படத்தில் போட்டோ சூட் எடுக்க வேண்டும் என்று கூட்டிப் போனார்கள்.
அப்போது மணி ரத்னத்துக்கு போன் பண்ணி, ’சார், சிவக்குமார் பையன் என்பதால் எந்தவித கற்பனையும் வளர்த்துக்காதீங்க. அவனுக்கு சினிமா பத்தி ஒன்னும் தெரியாது. டெஸ்ட் பண்ணிட்டு சாரி சொல்லி வேண்டாம்னு அனுப்பிட்டா, அவன் லைஃப் வேஷ்டா போயிரும். இப்பவே நோ சொல்லிடுங்க’னு சொன்னேன்.
ஆனால் அவர், ”எனக்கு 200 சதவீதம் நம்பிக்கை இருக்கு சூர்யா நல்லா பண்ணுவாருன்னு டெஸ்ட் சூட் ஓகே செய்து ’நேருக்கு நேர்’ படத்துல நடிக்க வச்சாரு. அந்த படத்துல ’அவள் வருவாளா’ பாட்டு ஷூட் முடிஞ்சதும், ‘இந்த க்ளோசப்ல இருக்கக்கூடிய கண்கள், தமிழ்நாட்டு பெண்களின் தூக்கத்தை கலைக்கக்கூடிய கண்கள்’ என்றார்.
சினிமாவே தெரியாத பையன் மேல நம்பிக்கை வைத்து நடிகன் ஆக்கிய இயக்குநர் மணிரத்னம் மற்றும் வசந்த் இருவருக்கும் பாதம் தொட்டு இந்த நேரத்தில் நன்றி தெரிவிச்சிக்கிறேன்.
அதன்பின்னர் சில படங்கள் சரியாக போகவில்லை. அதன்பின்னர் நந்தா என்ற படத்தின் மூலம் சூர்யாவை ஒரு முழு நடிகனாக ஆக்கினார் இயக்குநர் பாலா.
அவருக்கும், அதன் பிறகு சூர்யாவை செதுக்கி இன்றைக்கு இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கின்ற அத்தனை இயக்குநர்களுக்கும் நன்றி” என்று சிவக்குமார் பேசினார்.