நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையின் 70 வது பிறந்த நாளான இன்று(ஜூன் 27) நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய தந்தை தாஸ் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றியவர் என்பதை பல மேடைகளில் சொல்லியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், மறைந்த தன் தந்தையின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறையில் பணியாற்றிய போது கைதிகளை எப்படி நல்வழிப்படுத்தினார் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்த ஒரு நிகழ்வை தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதை தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
அதில்,”நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி. தாஸ் அவர்களின் மகன் சிவகார்த்திகேயன் என்று சொல்வது தான் பேரழகு.
மேலே புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை சொன்னார். அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ். கோயம்பத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணிபுரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார்.
என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார்.

சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்று இருந்தார், அதற்கு காரணம் ஜி.தாஸ் அவர்கள்.
சிறைப்பறவைகளை என்றும் அடிக்க கூடாது, சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும், சிறைப்பறவைகளுக்கு கல்வியை புகுத்த வேண்டும், இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ்.
எல்லா தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு, அந்த மன்னிப்போடும் அன்பையும், கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார் ஜி.தாஸ்.
கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிழ்ந்தவர்.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம், கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவார்.
இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா. மனித மனங்களை கொண்டாடுவோம்” என்று கூறப்பட்டுள்ள அந்த சம்பவத்தை பகிர்ந்து,” அப்பா… தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே. நான் இன்று இருக்கும் நிலைமைக்கு காரணம் நீங்கள் தான் அப்பா.
நம் கையில் என்ன இருக்கிறது என கவலைப்படாமல், மற்றவர்களுக்கு வெளியே தெரியாமல் உதவே வேண்டும் என கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.
எப்போதும் பெருமைக்குரிய மகனாக உங்களை நினைவில் வைத்திருப்பேன்” என நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இதற்கு ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மதி என்ற நெட்டிசன் ஒருவர்,”உங்க பையனும் அப்டியே உங்கள மாறி இருக்காரு படிப்புக்கு நிறைய செலவு பன்றாரு, கஷ்ட படுறவங்களுக்கு உதவி பன்றாரு இதெல்லாம் நீங்க மேல இருந்து பாத்துட்டு இருப்பிங்கனு நம்புறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த குமார் என்பவர், “சிவகார்த்திகேயன் இவ்வளவு ஒழுக்கமானவராக இருப்பதற்கு காரணம் அவர் தந்தை தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திமுக எம்.பி ஞானதிரவியம் முன்ஜாமின் கோரி மனு!
செந்தில் பாலாஜியை இனி ED கஸ்டடி எடுக்க முடியாது: முகுல் ரோத்தகி