கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி உள்ள சூழலில், சிறுவாணி அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
நகர் பகுதிகள் மட்டும் இல்லாமல் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அதனை ஒட்டிய நீர் வழித் தடங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி சிறுவாணி அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 35 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
சிறுவாணி அணையின் நீர்த்தேக்கம் உயரம் 50 அடியாகும். நீர்மட்டம் இன்று காலை 36.74 அடியாக இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 9.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
