இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்களை விநியோகிக்க டிசம்பர் 4-ந் தேதிக்குப் பின் காலக்கெடு நீட்டிப்பு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 6,16,90,765 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது 96.22% ஆகும். இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் சென்னையில் நேற்று தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் 96.22 சதவீதம்- 6.16 கோடி வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட 50% படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
SIR பணியில் 83,000 பணியாளர்களும் 33,000 தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில்தான் மிக அதிகபட்சமாக 2,45,340 அரசியல் கட்சிகளின் பூத் லெவல் ஏஜெண்டுகள் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவங்களை விநியோகிக்க காலக்கெடு எதுவும் வழங்கப்படாது. காலக்கெடு நீட்டிப்பு இல்லை. இந்த விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணி திட்டமிட்டபடி டிசம்பர் 4-ந் தேதியுடன் முடிவடையும்.
வாக்காளர் ஒருவர் கையெழுத்திட்டு விண்ணப்ப படிவத்தை கொடுத்தாலே அவருடைய பெயர் 9-ந் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அந்த விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால் வாக்காளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உரிய ஆவணங்கள் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
வெளி மாநிலங்கள், முகவரி மாறியவர்களிடம் இருந்து மொத்தம் 429 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு பின்னர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றார் அர்ச்சனா பட்நாயக்.
