மீண்டும் சிம்பு – சுசீந்திரன் கூட்டணி ! இந்த முறை என்ன ஜானர் ?

Published On:

| By Balaji

ஒரு காலத்தில் எந்த அளவுக்குப் படங்கள் இல்லாமல் இருந்தாரோ, அதையெல்லாம் சேர்த்துவைத்து இப்போது நடித்து முடித்துவிட வேண்டும் என பரபரப்பாக இயங்கி வருகிறார் நடிகர் சிம்பு. அதற்குச் சின்ன சாம்பிள் தான் ஈஸ்வரன்.

கொரோனா காலக்கட்டத்துக்கு முன்பு தயாரான படங்களே வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கொரோனா நேரத்தில் துவங்கி, வெறும் 28 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்து, ரிலீஸூக்கும் வந்துவிட்டது ஈஸ்வரன். இதற்கு முழுமுதற் காரணம் சிம்பு மட்டும் தான்.

ADVERTISEMENT

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நித்தி அகர்வால், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடிப்பில் தமன் இசையில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது ஈஸ்வரன். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தில் வரும் வசனம் ஒன்று, தனுஷின் அசுரன் படத்தைத் தாக்கியிருப்பதாக தனுஷ் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

தமிழக அரசு 100% இருக்கைக்கு அனுமதி அளித்ததால், தைரியமாக ரிலீஸ் தேதியை அறிவித்தது ஈஸ்வரன் படக்குழு. ஆனால், மீண்டும் திரையரங்கில் 50% மட்டுமே அனுமதி என தெரிவித்த போதும், அஞ்சாமல் களமிறங்குகிறது. படத்திற்கான முன் பதிவுகள் போய்க் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்தை முடித்த கையோடு, வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தை முடிக்கிறார். அதே வேகத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தின் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுக்க இருக்கிறார். அதோடு, சமீபத்தில் இயக்குநர் ராமிடம் ஒரு கதையைக் கேட்டிருந்தார் சிம்பு.

இந்நிலையில், சுசீந்திரனுடன் படப்பிடிப்பில் இருக்கும் போதே, அவரின் டைரக்‌ஷன் ஸ்டைல் பிடித்துப் போக, மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என்று கூறியிருந்தார் சிம்பு. அந்த கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் படமும் ஒரு வில்லேஜ் கதைதான் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமான பார்வையோடு இருக்குமாம்.

**-ஆதினி**

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share