அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஆளும் பாஜக மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிகள் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளன.
நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்தது. நாடாளுமன்ற தேர்தலுடன், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
ஏப்ரல் 19-ஆம் தேதி அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அருணாச்சல், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், இரண்டு மாநிலங்களின் பதவிக்காலமும் ஜூன் 2-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், இன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அருணாச்சல் பிரதேசம்
அருணாச்சல் பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 60 தொகுதிகளில், முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இந்தநிலையில், மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பாஜகவே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக 46 தொகுதிகள், தேசிய மக்கள் கட்சி (NPEP) 5 தொகுதிகள், தேசியவாத காங்கிரஸ் 3, அருணாச்சல் மக்கள் கட்சி (PPA) 2, காங்கிரஸ் 1, சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் பெரும்பான்மை பெற்ற பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
சிக்கிம்
சிக்கிம் மாநிலத்தில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலங்கரை விளக்கமாய் வழிகாட்டும் கலைஞர்: ஸ்டாலின் புகழ்மாலை!
திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம்: கலைஞர் 100 நிறைவை ஒட்டி கி.வீரமணி!