கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குறித்து கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று (மே 18) முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே 13ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், காங்கிரஸ் 135 இடங்களுடன் அமோக வெற்றி பெற்றது. என்றாலும் இன்னும் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவில்லை.
அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமாருக்கும், மூத்த தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே நிலவுகிறது.
இந்நிலையில் சித்தராமையாவும், டி. கே. சிவக்குமாரும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணு கோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
டி. கே. சிவக்குமாரும், சித்தராமையாவும் காங்கிரஸ் தலைவர்களை தனி தனியே சந்தித்தனர்.
இதில், சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி. கே. சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்க தலைமை முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
இந்தசூழலில், மீண்டும் கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு,
முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டைத் தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், துணை முதல்வர் பதவியை ஏற்க தயக்கத்துடன் ஒப்புக்கொண்டதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ஊகங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையாவையும்,
துணை முதல்வராக டி. கே. சிவகுமாரையும் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளதாகவும் பதவியேற்பு விழா மே 20 ஆம் தேதி நடைபெறும் என்றும் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அதேசமயம், “கட்சியின் நலன் கருதி துணை முதல்வர் பதவியை ஏற்க ஒப்புக்கொண்டேன். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. கர்நாடக மக்களுக்காக பணியாற்ற வேண்டும்” என டி. கே. சிவக்குமார் இந்தியா டுடே ஊடகத்திடம் கூறியுள்ளார்.
டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அவரது தம்பியும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ், “இந்த முடிவால் எனக்கு மகிழ்ச்சி இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
பிரியா
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இலாகா மாற்றம்!
2வது நாளாக தங்கம் விலை குறைந்தது!

