சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் மொத்தம் 16 ஷட்டர்கள் உள்ளன. இதில் 8 மற்றும் 9-வது ஷட்டர்கள் பழுதடைந்து உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் கோடையில் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பிரச்சினை ஏற்படுமா என்கிற கேள்விக்கு அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்குத் திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் ஏற்கனவே ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதன்படி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி.
இதில் தற்போது 1,908 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் மொத்தம் 16 ஷட்டர்கள் உள்ளன.
இதில் 8 மற்றும் 9-வது ஷட்டர்கள் பழுதடைந்துள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக புதிய ஷட்டர்கள் தயார்நிலையில் உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அனுமதி கிடைத்ததும் இந்த ஷட்டர்கள் பழுது பார்க்கப்படும். இந்த பணி 45 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதையும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஏரியின் ஷட்டர் பழுது பார்க்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்த பணி முடிந்ததும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள அதிகாரி ஒருவர்,
“பூண்டி எரியில் உள்ள 8 மற்றும் 9-வது ஷட்டர் பழுது பார்க்க தயார் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய அனுமதி கிடைத்ததும் பணி தொடங்கும்.
இந்தப் பணி நடைபெறும்போது ஏரியில் உள்ள தண்ணீர் இருப்பை குறைக்க வேண்டும்.
எனவே தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் அனுப்பப்படும். இதனால் சென்னை குடிநீரை அனுப்புவதில் எந்த பிரச்சினையும் இருக்காது” என்று உறுதியளித்துள்ளார்.
ராஜ்
பேருந்து விபத்து: 40 க்கும் மேற்பட்டோர் காயம்!