“மூடு டாஸ்மாக்கை மூடு” என்று மதுவுக்கு எதிராக முழக்கமிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன் மீது அண்மையில் தேசதுரோக வழக்கு போடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அன்று இந்த அமைப்பின் சார்பாக நடந்த மதுக்கடை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் தனசேகரன், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, தலைமைக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், காளியப்பன், டேவிட்ராஜ், ஆனந்தி அம்மாள் ஆகியோர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. கடந்த வாரமே காவல்துறை சார்பாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டாலும் இன்னும் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இவர்கள் ஆறு பேரும் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
