ஹோலி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்று கூறிய உத்தரப் பிரதேச முதல்வருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Should Muslims not come out in holy day
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 2 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. இந்தசூழலில் வரும் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி தமிழகத்தில் இருக்கும் வட மாநிலத்தவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதால் திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
ரமலான் நோன்பு, ஹோலி பண்டிகை ஒரே சமயத்தில் கொண்டாடப்படும் நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் இஸ்லாமியர்களுக்கு விடுத்த கோரிக்கை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர், “வருடத்துக்கு ஒருமுறைதான் ஹோலி வருகிறது. ஆனால் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வெள்ளியும் தொழுகை செய்கின்றனர். இதனால் இந்த வாரம் மசூதிக்கு செல்லாமல் வீட்டிலேயே தொழுகை செய்யுங்கள். ஒருவேளை ஹோலி அன்று தொழுகை செய்ய வெளியே செல்ல வேண்டுமெனில் அவர்களுக்கு வண்ணங்கள் பூசுவது பற்றிய பிரச்சினை இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் துறை அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான ரகுராஜ் சிங் இன்று (மார்ச் 11) கூறுகையில், “ இந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதி செல்லும் முஸ்லீம் ஆண்கள் தங்கள் மீது வண்ணங்கள் படக்கூடாது என்று நினைத்தால் அவர்கள் தார்பாய்களை அணிந்து செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வரும் அவரது சகாவும் இவ்வாறு கூறியிருப்பதற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உபி முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “ஒவ்வொரு மதத்தையும் பின்பற்றுபவர்களுக்கு சமமான மரியாதையை உறுதி செய்வது அவசியம். இந்த நிகழ்வை சகோதரத்துவ நிகழ்வாக கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்க” என்று கூறியுள்ளார்.
பிகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சாலும், ஹோலி பண்டிகையின் போது முஸ்லீம்கள் வெளியே வர வேண்டாம் என்று கூறியிருந்த நிலையில் ஆர்.ஜே.டி தலைவர் தேஜ்ஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வகுப்புவாத பதற்றத்தைத் தூண்ட முயற்சித்ததற்காக பாஜக எம்.எல். ஏ மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். பீகாரில் பாஜக- ஆர்.எஸ்.எஸ்.- சங் பரிவார் திட்டமெல்லாம் எடுபடாது” என்று கண்டித்துள்ளார்.
இந்த நாட்டில் ஒவ்வொரு மதத்தின் ரத்தமும் கலந்திருக்கிறது என்று கூறி ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ மனோஜ் ஜா கண்டனம் தெரிவித்துள்ளார். Should Muslims not come out in holy day