தவெக தலைவர் நடிகர் விஜய்யின் நீலாங்கரை பங்களா மொட்டை மாடியில் இருந்து பதுங்கி இருந்து மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மதுராந்தகம் இளைஞர் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் விஜய் பங்களா உள்ளது. நேற்று (செப்டம்பர் 18) மாலை நடைபயிற்சி மேற்கொள்வதற்காக மொட்டை மாடிக்கு சென்றுள்ளார் விஜய்.
அப்போது, ஒரு இளைஞர் பதுங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் விஜய். பின்னர் அந்த இளைஞரிடம் விஜய் பேசிக் கொண்டே, பாதுகாவலர்களையும் மாடிக்கு அழைத்தார்.
இது தொடர்பாக நீலாங்கரை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்திய பின்னர் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்த்தனர். விஜய் பங்களாவின் பின் பக்கத்தில் சிறிய கேட் உள்ளது; அதன் வழியாக நேற்று முன்தினம் உள்ளே நுழைந்து மொட்டை மாடியில் பதுங்கி இருந்ததாக போலீசாரிடம் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் 4 ஆண்டுகளாக அந்த இளைஞர் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஜய்யின் தீவிர ரசிகராக இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
