கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையை வைத்திருக்கும் இன்குபேட்டருக்கு, கல்லை வைத்து முட்டுக்கொடுத்த அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உடல் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் மற்றும் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிப்பது வழக்கமான ஒன்று. இதில் குழந்தையின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் வெப்பநிலையைக் கண்காணிக்க சென்சார்கள் பயன்படுத்தப்படும்.
இதற்காக தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்குபேட்டர் வசதிகள் உள்ளன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியிலும் இன்குபேட்டர் வசதி உள்ளது.
பொதுவாக இன்குபேட்டர் கருவியின் நான்கு புறமும் இரும்பிலான கால்கள் அமைக்கப்பட்டு, அதை தள்ளி செல்வதற்கு ஏதுவாக சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள இன்குபேட்டரில், 3 பகுதிகளில் மட்டும் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு புறத்தில் சக்கரம் எதுவும் இல்லை. அந்த இடத்தில் இரண்டு கல்களை வைத்து முட்டுக்கொடுத்து இருக்கின்றனர்.
கல்களை வைத்து முட்டு கொடுத்திருக்கும் அந்த இன்குபேட்டரில், குழந்தை ஒன்றும் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இதைப்பார்த்த ஒரு தரப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர்,”இப்படி பச்சிளங்குழந்தையின் உயிரோடு விளையாடுவது சரியா?,” என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திடீரென உயர்ந்த தங்கம்… காரணம் என்ன?
வார விடுமுறை: சென்னையில் இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தேஜஸ்வி யாதவுடன் காரில் பயணித்த ராகுல்… வைரலாகும் புகைப்படம்!