அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – கட்டுரை 5 – முரளி சண்முகவேலன்

Published On:

| By Balaji

முரளி சண்முகவேலன்

கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)

மெய்யறு – ஒரு மொழிபெயர்ப்புக் குறிப்பு

Post-truth பற்றி எழுதத் தொடங்கியவுடனே இந்தச் சொற்றொடரை எப்படி தமிழில் மொழிபெயர்ப்பது என்று நான், மின்னம்பலம் ஆசிரியர் குழு ஆலோசகர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், மின்னம்பலம் கலைக்குழு ஆலோசகர் திரு. காந்தி பாலசுப்பிரமணியன் ஆகியோர் தொடர்ந்து விவாதித்தோம்.

கட்டுரையில் விளக்கியுள்ளபடி, post-truth என்பது உண்மை, பொய் குறித்த சமூக அரசியல் மதிப்பீடுகள் பற்றியதல்ல. உண்மை, பொய் ஆகிய இரண்டையும் நிராகரிப்பதே post-truth ஆகும். அதாவது உண்மை, பொய் பற்றிய மதிப்பீடுகளை ஒட்டுமொத்தமாக disregard செய்வதே post-truth ஆகும். எனவே, தற்சமயம் தமிழ் ஊடகங்களில் post-truth என்ற சொல்லுக்கு, புழக்கத்தில் உள்ள மொழிபெயர்ப்புகளான ‘உண்மை கடந்த’, ‘உண்மைக்கு அப்பால்’ போன்ற சொற்கள், ஆங்கில மூலச் சொல்லின் பொருளை போதுமான அளவில் மொழிவழியாக கடத்தவில்லை என மூவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தோம்.

Post-truth என்ற சொல்லை மொழிபெயர்க்கும்போது அச்சொல் உண்மையை மட்டுமல்ல; பொய்யையும் சேர்த்தே நிராகரிப்பது என்பதை உணர்த்த வேண்டும். உண்மை, பொய் என்ற இரு மதிப்பீடுகளுக்கும் மெய்மை அடித்தளம். மெய்-மை (truth) என்பது உண்மையிலிருந்து (fact) வேறுபடுகிறது. மெய்மையின் நிராகரிப்பே, மெய்யறு.

பல தெரிவுகளுக்குப் பின்னர் திரு. காந்தியின் பரிந்துரையான மெய் அறுத்தல் என்ற பொருளுடன் ‘மெய்யறு’ என்ற சொல் post-truth-இன் கருத்துருவுக்கு நெருங்கியிருந்தது.

மெய்யறு என்ற சொல்லை கையறு, மெய்யுறு (புணர்ச்சி – தொல்காப்பியத்தில் வருவது) ஆகியவற்றோடு குழப்பிக்கொள்ளக் கூடாது. மெய் அறுத்தலே மெய்யறு.

இந்த மொழிபெயர்ப்பு இறுதியுமல்ல.

இக் கட்டுரைத்தொடரின் விளைவாக இச்சொல்லின் மொழிபெயர்ப்பு, அவற்றின் அரசியல் குறித்து உரையாட முன் வருமாறு ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், ஊடகப் பண்டிதர்கள், வாசகர்கள் ஆகியோரை வரவேற்கிறோம்.

இனி, கட்டுரைக்குச் செல்வோம்.

2016ஆம் ஆண்டுக்கான ஆங்கிலச் சொல்லாக “post-truth” (“போஸ்ட் ட்ருத்”) என ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்துள்ளது. உலகெங்கும் பரவி வருகிற வலதுசாரிகளின் எழுச்சிக்கு “போஸ்ட் ட்ருத்” என்றழைக்கப்படும் “மெய்யறு” என்ற கருத்துரு ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

மெய்யறு என்ற கருத்துரு அமெரிக்க, ஐரோப்பிய தேர்தல்களையும் கருத்துக் கணிப்புகளையும் பாதித்திருக்கிறது. வலதுசாரிகளின் எழுச்சிக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று நிபுணர்கள் (experts) கூறிவருகிறார்கள்.

மெய்யறு அரசியல் (post-truth politics), மெய்யறு சமுதாயம் (post-truth society), மெய்யறு ஊடகம் (post-truth media) என்ற பதங்கள் மேற்குலக ஊடகங்களில், பல்கலைக்கழகங்களில், கொள்கையாளர்களுக்கிடையே அதிகம் விவாதிக்கப்படுகின்றன.

மெய்யறு என்ற கருத்துருவின் எளிமையான பொருள்தான் என்ன? இந்தக் கருத்துரு நமது சமூகம், ஊடகம், அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் மெய்யறுவின் பொருளை நமக்கு அறிமுகமான தமிழ்ச்சூழலில் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். பிறகு, மேற்கத்திய சூழலில் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பியச் சமூகத்தில் மெய்யறுவின் பங்கு என்ன என்பதுபற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

மெய்யறு என்றால் என்ன?

மெய்யறு (post-truth) என்ற சொல் உண்மை, பொய் என்ற இரு நிலைகளையும் நிராகரிக்கிறது. இதைப் புரிந்துகொள்ள மிக எளிமையான இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

உதாரணம் ஒன்று:

“ராகவன், என் பொருளைத் திருடிவிட்டார்” – கேசவன் புகார்.

“கேசவன் பொருளை நான் எடுக்கவே இல்லை. எங்கள் இருவரிடையேயான முன்விரோதத்தால் அவர் என்னை திருடன் என்று குற்றம்சாட்டுகிறார்” – ராகவன் பதில்.

கேசவன் சொல்வது உண்மையானால், ராகவன் பொய்சொல்லி தப்பிக்க முயல்கிறார். அதாவது திருட்டை மறுக்கிறார். இப்படி மறுப்பதன்மூலம், திருட்டு என்னும் செயல் ஒழுங்கற்றது என்ற மெய்மையையும் ராகவன் ஒப்புக்கொள்கிறார்.

ஒருவிதத்தில் பார்த்தால் ராகவன், கேசவன் இருவருமே தாங்கள் சொல்வதே உண்மை என்று வாதிடுகிறார்கள். ரா-வும், கே-வும் தாங்கள் சொல்வதே ‘சரி’ அல்லது ‘உண்மை’ என வாதிடுகின்றனர். ஏனெனில், திருட்டு என்பது அறமற்ற செயல் என்பதை இருவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

திருட்டு என்பது தவறு என்னும் மெய்மையை (அறத்தை) நம்புவதாலேயே இருவரும் தங்களை நல்லவன் என நிரூபிக்க வழக்கை விசாரிப்பவரிடம் வாதிடுகின்றனர். ரா. தான் திருடினார் என்பதை இப்போது கே. நிரூபிக்க வேண்டும். யார் உண்மை சொல்கிறார், யார் பொய் சொல்கிறார் என்று கண்டறிவது வழக்கை விசாரிப்பவர்களின் பொறுப்பு. நிற்க.

உதாரணம் இரண்டு: வடிவேலு, சங்கிலி முருகன் நடித்த புகழ்பெற்ற ‘என்ன, கையப் பிடிச்சி இழுத்தியா?!’ நகைச்சுவைக் காட்சிக்கு வருவோம். பஞ்சாயத்து தலைவர் சங்கிலி முருகன் ‘ஏம்ப்பா தம்பி, அந்தப் பொண்ண கையப் பிடிச்சு இழுத்தியா?!’ என்று கேள்வி கேட்கும்போது குற்றம் சாட்டப்பட்ட வடிவேலு தப்பிக்கும் வழி குயுக்தியானது.

Shock victory and commoners Part 5 by Murali Shanmugavelan

‘நான் கையைப் பிடிச்சி இழுத்தேனா? இல்லையா?” என்ற கேள்விக்குள்ளேயே வடிவேலு வரமாட்டார். பஞ்சாயத்தின் கேள்விக்குள் சிக்காமல், கேட்பவரின் கேள்வியின் பகுதியையே (‘என்ன, கையப் பிடிச்சி இழுத்தியா?!’) திருப்பிக் கேட்டவண்ணம் வடிவேலு இருப்பார். இதுவே மெய்யறு உத்தி.

வடிவேலு இப்படிச் செய்வதால், பஞ்சாயத்தில் இருக்கும் பெருசுகள், அவர்களின் அதிகாரம், அவருக்கெதிராக வைக்கப்படும் பாலியல் புகார் என்ற அனைத்தையும் அலட்சியப்படுத்துகிறார். தனக்கு எதிராக நிலவும் அந்தச் சூழ்நிலையை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க, அழிக்க (obliterate) முயல்கிறார். இதுவே மெய்யறு அரசியலின் உத்தி.

அப்புறம் இந்த நகைச்சுவையில் உள்ள மற்றொரு மிக முக்கியமான ஒரு விசயம்: வடிவேலு பொய் சொல்வது கிடையாது. நான் கையைப் பிடித்து இழுக்கவில்லை என்று எதிர்வாதம் செய்வதில்லை. அவர்மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல என்று நிரூபிக்க வடிவேலு முயல்வதில்லை – இது மிக முக்கியம்.

மாறாக, அவரை விசாரிக்க கூடியிருக்கும் பஞ்சாயத்தின் அதிகாரத்தை அலட்சியம் (disregard) செய்கிறார்; அவர்களின் கவனத்தையே சிதைக்கிறார் (misdirection). இதன்மூலம் வடிவேலு உண்மை, பொய் என்ற எல்லா நிலைகளையும் நிராகரித்து கடக்கிறார்.

அந்த நகைச்சுவைக் காட்சியின் முடிவில் பஞ்சாயத்தார் இருவரின் உடல்நலம் கவலைக்குள்ளாகையில் ஊர்ப்பஞ்சாயத்தும் கலைகிறது. இப்போது ஊரின் பிரச்னையே திசைமாறி விடுகிறது. மெய்யறுவின் மற்றொரு முக்கியமான விளைவு இது. பரிசீலிக்கப்பட்ட பிரச்னையின் அகப்பொருளையே மாற்றி வேறு ஏதோ பிரச்னையிலோ அல்லது நிகழ்விலோ முடிப்பது மெய்யறு உத்தியாகும்.

ஒருவேளை வடிவேலு எதிர்த்து வாதாடியிருந்தால், “அய்யா, பெண்ணின் கையை ஒருவர் அப்பெண்ணின் அனுமதியின்றி பிடித்து இழுப்பது தவறுதான் (மெய்மை). அது ஒரு கீழ்மையான செயல். நான் அந்த இழிச் செயலை செய்யவில்லை” என்ற நிலையிலிருந்துதான் வாதாடியிருக்க முடியும். இப்படி வாதாடுவது ராகவன், கேசவன் உதாரணத்தில் நாம் பார்த்தது.

ஆக, பொய் உயிருடன் இருக்க உண்மை தேவை. ஆனால் மெய்யறு உண்மை(பொய்)யின் இருப்பையே நிராகரிப்பது ஆகும். இதுவே மெய்யறு என்ற கருத்துருவின் அடிப்படைப் பண்பு.

ஒரு சிறிய எச்சரிக்கை! மேற்சொன்ன உதாரணம் சற்றே எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மெய்யறு என்ற பதத்தின் அடிப்படைக் கருவை விளங்கிக் கொள்வதற்காக மட்டுமே சொல்லப்பட்டது. ஆனால் தினசரி வாழ்க்கையில் மெய்யறு அரசியல், மெய்யறு சமுதாயம், மெய்யறு ஊடகம், மெய்யறு பண்டிதர்கள் என நாம் நீட்டிக்கொண்டேபோனால், இந்தக் கருத்துரு மேலும் சிக்கலாகிறது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

அதற்குமுன், மீண்டும் ஒருமுறை: மெய்யறு (post-truth) என்பது மெய்மை என்ற கருத்துருவை உதாசீனப்படுத்துவதாகும் (disregard for truth) – நிராகரிப்பதாகும். ஒரு பிரச்னையின் மீதான மக்களின் கவனத்தை மெய்யறு திசைதிருப்பும். அதை மக்களும், பாதிக்கப்பட்டவர்களும் – அறிந்தோ, அறியாமலோ ஏற்றுக்கொள்வர். ஊடகங்கள், இணையம், பிரபலங்கள், நிபுணர்கள் என அனைவரும் மக்களை ஏற்றுக்கொள்ளவைப்பதில் பெரும்பங்காற்றுவர்.

தொடரும்…

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Shock victory and commoners Part 5 by Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் –  முரளி சண்முகவேலன்

கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? –  முரளி ஷண்முகவேலன்

கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்

கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share