போதைப்பொருள் வழக்கில் தலைமறைவான நடிகர் ஷைன் டாம் சாக்கோ இன்று (ஏப்ரல் 19) போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. கோலிவுட்டிலும் நடித்து வரும் இவர், சமீபத்தில் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் காவல்துறையினர் போதைப் பொருள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ 3வது மாடியில் இருந்து தப்பி ஓடியதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உறுதி செய்த போலீசார், சாக்கோவை தொடர்பு கொண்டு விசாரணைக்காக எர்ணாகுளம் வடக்கு காவல் துணை ஆய்வாளர் முன் ஆஜராக கூறியுள்ளனர்.
இதற்கிடையே தலைமறைவான சாக்கோவை கொச்சியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் (NDPS) சட்ட பிரிவு 27 (போதைப்பொருளை பயன்படுத்துதல்) மற்றும் 29 (குற்றவியல் சதி) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கொச்சி நகர வடக்கு காவல்நிலைய போலீசார் தெரிவித்தனர்.
கைதான அவரிடம் சுமார் நான்கு மணி நேர விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை ஜாமீனில் போலீசார் விடுவித்துள்ளனர்.
ஏற்கெனவே இன்னும் வெளியாகாத ‘சூத்ரவக்யம்’ படப்பிடிப்பு தளத்தில் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியாக சக நடிகர்கள் AMMA சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.