மலையாளத்தில் புகழ் பெற்ற ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர் டி எக்ஸ்’, ‘இஷ்க்’ போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கும் நடிகர் ஷேன் நிகாம், தமிழில் அறிமுகமாகும் படம் மெட்ராஸ்கரன்.
இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக் குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த முன்னணி நடிகையான நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான சாம் C.S. இசையமைக்கிறார். ‘ரங்கோலி’ படத்தை இயக்கிய இயக்குநரான வாலி மோகன்தாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச் செல்லும் என்பது தான் இப்படத்தின் மையக் கரு. ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன்தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக எழுதியுள்ளார் என்கிறது படக்குழு.
இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கூறும்போது, “இது மிகச் சிறந்த கதை. அனைவருக்கும் மிக நல்ல ரோல் இருக்கிறது. படத்தில் சின்ன கதாப்பாத்திரம் பெரிய கதாப்பாத்திரம் என்று எதுவும் இல்லை. மிகப் பெரிய எமோஷன் இருக்கிறது. இப்படம் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வர வர உங்களுக்குத் தெரியும். நடிகர் ஷேன் உடன் மலையாளத்தில் வேலை செய்துள்ளேன்.
அவருக்கு இந்தப் படம் தமிழில் சிறப்பான படமாக இருக்கும். கலையரசன் இந்தப் படத்திற்குப் பிறகு, பெரிய இடத்தை அடைவார். ஒரு டீமாக இந்தப் படம் சிறப்பானதாக அமையும் என நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் வாலி மோகன்தாஸ்
தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் படத்தைப் பார்த்துவிட்டுத் தான் கூப்பிட்டார். கதை சொன்ன 5 நிமிடங்களில் இந்தப் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். ஷேன் பிரதரை சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம். அவர் தமிழில் நடிக்க சம்மதித்ததற்கு நன்றி.
ஐஸ்வர்யா தத்தாவால் தான் இந்தப் படம் ஆரம்பித்தது. அவருக்கு என் நன்றி. நிகாரிகாவை இப்போது தான் நேரில் சந்திக்கிறேன். அவருக்கு இப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம். சாம் சி.எஸ். ரசிகன் நான். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. படம் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. படம் முடித்த பின் உங்களிடம் சொல்கிறோம். இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என் நன்றிகள்.
நடிகர் ஷேன் நிகாம்
சின்ன வயதிலிருந்தே நிறையத் தமிழ் சினிமா பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன். கேரளாவில் தமிழ் ஹீரோக்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். அதே போல் தான் நானும். தமிழுக்கு நான் நடிக்க வருவது மகிழ்ச்சியாக உள்ளது. வாலி சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதை எனக்கு மிக நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றியது. உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென்று நம்புகிறேன்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்!
தேர்தல் நிதிப்பத்திரம் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!