“வாழ்க்கையை முடித்துக்கொள்ள அனுமதிகொடுங்கள்” என்று பெண் நீதிபதி ஒருவர் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருப்பது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. UP women judge seeks permission to end life
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கல்வி நிறுவனங்கள், பேருந்துகள், பணியிடங்கள் என பல இடங்களிலும் பாலியல் தொல்லைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டமே பொய்யானது என பெண் நீதிபதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும், அதன் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் பெண் சிவில் நீதிபதி, அந்த மாவட்ட நீதிபதி மீது பாலியல் புகார் அளித்து எழுதியுள்ள 2 பக்க கடிதத்தில்,
“மிகுந்த வேதனையிலும் விரக்தியிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இது எனது வாழ்க்கை கதையைச் சொல்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நீங்கள் அனுமதிக்க வேண்டும். நான் மிகுந்த ஆர்வத்துடனும், சாதாரண மக்களுக்கு நீதி வழங்குவேன் என்ற நம்பிக்கையுடனும் நீதித்துறையில் சேர்ந்தேன்.
திறந்த நீதிமன்றத்தில் வைத்து அவமானப்படுத்தப்பட்டேன். ஒரு குப்பையை விட, பூச்சியை விட மோசமாக நடத்தப்பட்டேன்.
இந்தியாவில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் இதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாலியல் துன்புறுத்தலுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். POSH எனப்படும் பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடை சட்டம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் சுத்தமான பொய்.
நீங்கள் புகார் செய்தால், நீங்கள் சித்திரவதை செய்யப்படுவீர்கள். உச்ச நீதிமன்றம் உட்பட யாரும் எனது குரலை கேட்கவில்லை.
ஒரு குறிப்பிட்ட மாவட்ட நீதிபதி மற்றும் அவரது கூட்டாளிகளால் நான் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த மாவட்ட நீதிபதி இரவில் என்னை அவரது வீட்டுக்கு வரச்சொல்கிறார்.
இதுதொடர்பாக 2022ல் அலகாபாத் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்ன நடந்தது…. நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்? என யாரும் கேட்க கூட இல்லை. ஜூலை 2023 இல் உயர் நீதிமன்றத்தின் உள் புகார்க் குழுவிடம் நான் புகார் செய்தேன்.
ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பினேன். ஆனால் விசாரணையை தொடங்க அவர்களுக்கு 6 மாதம் தேவைப்பட்டது. அந்த விசாரணையும் கேலிகூத்தாக நடந்து வருகிறது. விசாரணையில் உள்ள சாட்சிகள் அந்த மாவட்ட நீதிபதியின் கீழ் வேலை செய்யும் துணை அதிகாரிகள் ஆவர். இதில் எப்படி நியாயம் கிடைக்கும்?
நான் விரும்பியது நியாயமான விசாரணை மட்டுமே. அது நடக்கவில்லை. உச்ச நீதிமன்றம் எனது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்று நினைத்தேன். ஆனால் 8 நொடிகளில் எனது ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை “டிஸ்மிஸ்” என்று சொல்லப்பட்டது.
அப்போது என் உயிர், என் ஆன்மா, என் கண்ணியம் என எல்லாம் நிராகரிக்கப்பட்டது போல் உணர்ந்தேன்.
இப்போது நான் நம்பிக்கையற்றவளாக உணர்கிறேன். அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு நான் எப்படி நீதி வழங்குவேன்? எனக்கு இனி வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் நடை பிணமாகத்தான் இருக்கிறேன். எனவே கண்ணியமாக சாக அனுமதி கொடுங்கள்” என்று கேட்டுள்ளார்.
இந்தசூழலில் பெண் நீதிபதி அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அலகாபாத் நீதிமன்றம் விளக்கமளிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெண் நீதிபதியின் இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL2024: புதிய கேப்டனாக ஹர்திக் நியமனம்… அப்போ ரோஹித்தோட நிலைமை?
மோசடி வழக்கு: விசாரணையில் வெளிவந்த தகவல்… பிரகாஷ் ராஜ் நிம்மதி பெருமூச்சு!
UP women judge seeks permission to end life
