சென்னை பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை அப்பகுதி மக்கள் குடித்ததாக கூறப்படும் நிலையில், 2 பேர் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அடுத்து உள்ள கண்டொன்மென்ட், காமராஜ் நகர், மலைமேடு ஆகிய பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மக்களுக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களை அப்பகுதி மக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால்தான் இப்படி 30க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே திருவீதி(வயது 56) மற்றும் மோகனரங்கம்(வயது 42) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் உள்ளூர் பகுதி மக்கள், 88 வயதான வரலட்சுமியும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் இறந்துள்ளார் என்று கூறிய நிலையில் அதனை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மறுத்துள்ளனர். வயது மூப்பு காரணமாகத்தான் வரலட்சுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.
இதனையடுத்து பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “வெவ்வேறு மருத்துவமனைகளில் 22 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடிநீரில் பாதிப்பா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குடிநீர் மாதிரியை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம்.
பாதிப்புக்குள்ளான அனைவருக்குமே வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.
இருவர் இறந்ததற்கான காரணம் பிரேதப் பரிசோதனை மூலம்தான் தெரியவரும்.
பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றார்.
இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ” சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று பேர் உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?
அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 – 13 தான் என்கிறார் தா.மோ.அன்பரசன்.
ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது” என தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முதல்வரானார் ஃபட்னாவீஸ் : துணை முதல்வர்களான ஷிண்டே, அஜித் பவார்