தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை மையமாக வைத்து கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. senthilbalaji meeting with Brewery owners
இந்த ரெய்டு தொடர்பாக மார்ச் 13ஆம் தேதி மாலை அமலாக்கத்துறை இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டது.
அதில் டாஸ்மாக் விவகாரத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை சுட்டிக்காட்டி இருந்தது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டது.
இந்த பின்னணியில் இன்று (மார்ச் 14) சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘டாஸ்மாக் ஊழல் பற்றி அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கைக்கு அரசின் பதில் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்கள். பின் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடித்ததும் சட்டமன்ற வளாகத்திலேயே மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்து, அமலாக்க துறையின் அறிக்கை குறித்து விளக்கினார்.
அமலாக்க துறையின் நடவடிக்கைகள் பட்ஜெட் தினத்திற்கு முன்பு இந்த அறிக்கை வந்ததின் பின்னணி என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட அதே தொகையை அமலாக்கத் துறை தன் அறிக்கையில் குறிப்பிடுவதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.
இந்த விவகாரத்தில் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சம்மன் அனுப்புவதற்காக தயாராகி வருகிறது அமலாக்கத்துறை.
மதுபான ஆலை உரிமையாளர்களுடன் ரகசிய சந்திப்பு! senthilbalaji meeting with Brewery owners
அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “ரெய்டுக்குள்ளான மதுபான ஆலை உரிமையாளர்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள், ஏன் அமைச்சர் செந்தில்பாலாஜி கூட அமலாக்கத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த கண்காணிப்பில் தான் முக்கியமான இன்னொரு தகவலும் தெரிய வந்திருக்கிறது.
அதாவது டாஸ்மாக் ரெய்டு முடிந்த பிறகு சென்னையில் இருக்கும் பார்க் நட்சத்திர ஹோட்டலில் மதுபான ஆலை உரிமையாளர்கள் ரகசியமாக சந்தித்திருக்கிறார்கள்.
இந்த சந்திப்பின்போது சில நிமிடங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அங்கே சென்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சோதனையின் போது என்ன நடந்தது, அமலாக்கத்துறை என்னென்ன ஆதாரங்களை கைப்பற்றினார்கள் என்பது பற்றி மதுபான ஆலை உரிமையாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கி இருக்கிறார்கள். அதே ஹோட்டலில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் தங்கி இருந்தது அவர்களுக்கு தெரியாது” என ED வட்டாரத்தில் பரபரப்பாக தெரிவிக்கிறார்கள்.