ஜாமீனா, அமைச்சரா? செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டது என்ன?

Published On:

| By Aara

செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்க வேண்டுமா அல்லது ஜாமீனில் வெளியே இருக்க வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் கடுமையான சாய்ஸை நேற்று (ஏப்ரல் 23)  வழங்கியிருக்கிறது.  வரும் திங்கள் கிழமை வரை செந்தில்பாலாஜிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. சட்ட ரீதியான சாதக பாதகங்கள் என்ன என்பதையெல்லாம் நேற்று மாலையில் இருந்தே திமுக மேலிடம் ஆலோசிக்கத் தொடங்கிவிட்டது. Senthil Balaji’s bail… Was Stalin misled?

இதுகுறித்து திமுக சட்ட வட்டாரங்களில் பேசியபோது,

உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மிக சீரியசாக கேள்வி எழுப்பியிருக்கிறது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வழக்கு விசாரணையின்போது,

‘செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முயற்சித்தார். அந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு சற்று முன்பாக,  அதுவரை எட்டு மாதமாக தான் வகித்து வந்த இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின் உச்ச நீதிமன்றத்தில்  ஜாமீன் பெற முயற்சித்தபோது,  அவர் அமைச்சராக இல்லை.  உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தபோது அவர் அமைச்சராக இல்லை.  அவர் அமைச்சராக பதவி வகிக்கவில்லை என்ற அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.  ஆனால்,  உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்த  இரண்டு நாட்களில் மீண்டும் அமைச்சராகிவிட்டார். இதை உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதை நேற்று குறிப்பிட்ட நீதிபதி ஓகா, ’ உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான  சூழ்நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக,  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட உடனேயே, அவர்  அமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் அவர் உச்ச நீதிமன்றம் பற்றிய என்ன பார்வையை வெளிப்படுத்துகிறார்?

முந்தைய தீர்ப்பில், குற்றத்தில் அவர் வகித்த பங்கு குறித்து திட்டவட்டமான கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், அத்தகைய நபரை ஜாமீனில் இருக்க அனுமதித்தோம். ஏனென்றால், தகுதி  (மெரிட்) அடிப்படையில்  அல்ல. விசாரணை முடியும் வரை நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டாம் என்ற அடிப்படையிலேயே ஜாமீன் வழங்கினோம். Senthil Balaji’s bail… Was Stalin misled?

ஆனால், இந்த நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.  இந்த நீதிமன்றத்தின்  தீர்ப்பில், குற்றத்தில் அவருக்குப் பங்கு இருப்பதாகக் கூறும் கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை புறக்கணிக்க முடியுமா?

உங்களுக்கு எதிரான தீர்ப்புகளைப் புறக்கணித்ததன் மூலம் நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்ற வரிசையில் அதையும் நாங்கள் இங்கு  பதிவு செய்வோம், ஏனெனில்  ஜாமீன் மனு மீதான முழு விசாரணையும் அவர்  அமைச்சராக இல்லை என்ற அடிப்படையில் நடந்தது.

பிஎம்எல்ஏவில் ஜாமீன் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும். ஜாமீனா, அமைச்சர் பதவியா இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்”  என்று நீதிபதி ஓகா கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டபோது, செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை.  அவர் அமைச்சராக  இல்லை என்ற நிலையின் அடிப்படையில்தான் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், ஜாமீன் கிடைத்த இரு நாட்களிலேயே அவர் முதல்வர் ஸ்டாலின் கேபினட்டில் அமைச்சரானார்.  

கேபினட்டில் யாரை சேர்த்துக் கொள்வது, யாரை நீக்குவது என்பது முதலமைச்சரின் பிரத்யேக உரிமை.

இந்த வகையில் அப்போதே முதல்வரிடம், ‘உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததே அவர் அமைச்சராக இல்லை என்ற அடிப்படையில்தான்.  மீண்டும் செந்தில்பாலாஜி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டால், அவரது ஜாமீன் மீதான பார்வையை  உச்ச நீதிமன்றம் மாற்றிக் கொள்ள வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது முதல்வருக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து வேறுவிதமான நம்பிக்கை ஊட்டப்பட்டது. Senthil Balaji’s bail… Was Stalin misled?

அதனால்தான்  இப்போது உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதை அடிப்படையாக வைத்துதான் ஆலோசனை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share