சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகச் சிறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை செய்தது. ஜூன் 14ஆம் தேதி காலை அவரை கைது செய்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சென்னை முதன்மை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
19ஆவது முறையாகச் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் கடந்த ஜனவரி 30 தேதி விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,
“கடைநிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையிலிருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பது ஏன்? இதன்மூலம் மக்களுக்கு அரசு என்ன சொல்ல வருகிறது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் அமலாக்கத் துறை தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இதுகுறித்த கடிதத்தை முதல்வர் தரப்புக்குச் செந்தில் பாலாஜி அனுப்பியிருப்பதாகவும், இக்கடிதம் குறித்து முதல்வர் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, “செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்களுக்கும் மேலாகச் சிறையிலிருந்தாலும், அமைச்சராகத் தொடர்கிறார். இதனால் அவருக்கு ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும்” என்று அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!