இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வாரா? – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published On:

| By Selvam

senthil balaji portfolio madras high court

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இன்று (ஆகஸ்ட் 4) நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்தன், வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஆகியோர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

தமிழக அரசு தரப்பில், “அமைச்சரவையின் அறிவுறுத்தலின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். அமைச்சரவைக்கு இணையாக ஆளுநருக்கு அரசியல் சாசனத்தில் அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆளுநரோ, குடியரசு தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது. குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் அமைச்சராக நீடிக்க அரசியல் சட்ட விதிகள் எந்த தடையும் விதிக்கவில்லை” என்று வாதிடப்பட்டது

மனுதாரர்கள் தரப்பில், “அமைச்சரவை ஆலோசனையின் படி தான் ஆளுநர் ரவி செயல்பட வேண்டும் என்றாலும் சில விதி விலக்குகள் உள்ளது. அது போன்ற சூழல் தற்போது நிலவுகிறது. சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று எழுத்துப்பூர்வமான வாதங்களை  தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

செல்வம்

காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

உணவகங்களில் புகை பிடிக்கும் அறைக்கு தடை: அரசிதழ் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share