முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (மே 15) விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
11 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் மீண்டும் ஜாமீன் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த மே 6ஆம் தேதி நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமசுந்தரம் ஆஜராகி, “செந்தில் பாலாஜி 328 நாட்களாக சிறையில் இருக்கிறார். எனவே அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, இந்த மனு மீது பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இந்த மனுவை ஒத்திவைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மே 15ஆம் தேதி நிச்சயம் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உறுதியளித்தனர் .
அதன்படி செந்தில் பாலாஜியின் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…