செந்தில் பாலாஜி வழக்கு : இப்படி கேட்பது சரியல்ல – ED மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 5) மீண்டும் நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்ட்டின் ஜார்ஜ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன், “நான் பதிலுடன் தயாராக இருக்கிறேன். ஆனால் மூன்றாவது நீதிமன்றத்தில் மதிய உணவு இடைவெளிக்கு பிறகு ஜாமீன் கோரிய வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது. இன்று நாங்கள் அங்கு வாதாட வேண்டும் என்பதால் இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க முடியுமா?” என்று கேட்டார்.

இதற்கு நீதிபதி ஓகா, “வேறுஒரு நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரிக்கிறது என்பதால் அதற்காக நீங்கள் அவகாசம் கேட்பது சரியாக இல்லை” என்று அதிருப்தி தெரிவித்தார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இந்த வழக்கு 8 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உடனே நீதிபதி ஓகா, “இந்த நீதிமன்றம் உங்களுக்கு முக்கியமில்லை… அப்படிதானே” என்று அமலாக்கத் துறையிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன், “நான் அப்படி சொல்ல வரவில்லை” என்று சொல்ல, மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கமுடியுமா என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதி ஓகா, “நீங்கள் வாதாட தயாராக இல்லாததால் ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். மதியம் வேறு வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது என்பதால் அல்ல” என கூறினார்.

இதற்கு துஷார் மேத்தா, “அவர் பேசியது தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன், அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதையடுத்து நீதிபதி ஓகா, “சரி, அந்த ஆவணத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன், “அந்த பென்டிரைவில் இருந்து எடுக்கப்பட்டது. இன்னும் பல குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில ஆவணங்கள் 14.2 கோடி வசூலித்ததாகக் காட்டுகின்றன. ஒவ்வொரு வேலையும் விற்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ள மொத்த விவசாய வருமானத்துக்கும், அவர் இப்போது கூறியுள்ள விவசாய வருமானத்துக்கும் முற்றிலும் முரண்பாடு உள்ளது” என்று வாதாடினார்.

பான் எண், முகவரி இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

இதை விசாரித்த நீதிபதிகள், வழக்கை நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ரயில் பயணிகள் விவரம் லீக்… ஐஆர்சிடிசி ஆக்‌ஷன்!

நெல்லை மேயர் தேர்தல்: திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share