செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரம்: தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்!

Published On:

| By Monisha

senthil balaji bail pettiton

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணைக்காக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணி ஆகியோர் ஜாமீன் கோரி முறையிட்டனர்.

அப்போது நீதிபதி ரவி, “இந்த வழக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வருவதால் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

உயர்நீதிமன்றம் ஒருவேளை ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே தன்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா அல்லது சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா என்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

“இந்த வழக்கை யார் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள்” என்று நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறையை சாடிய உயர்நீதிமன்றம்!

தினமலருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share