சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஐந்து நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 11) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன. ஜூன் 13 இரவு கைது செய்யப்பட்ட அவர் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு தற்போது புழல் சிறையில் இருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் உயா் நீதிமன்றம், வழக்கை எம்பி, எம்எல்ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், அந்த வழக்கை விசாரிக்க முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆவணங்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டது.
முன்னதாக செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக உயர் நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் இரண்டும் கூறியிருந்தன.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் ஜாமீன் மனு இன்று (செப்டம்பர் 11) விசாரணைக்கு வந்தது.
செந்தில்பாலாஜி தரப்பில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறையின் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது அமலாக்கத் துறையின் பதில் என்ன என்பது 15 ஆம் தேதிக்குள்ளோ அல்லது 15 ஆம் தேதியோ தெரியவரும்!
–வேந்தன்
