ADVERTISEMENT

பங்குச் சந்தை: நேற்று நடந்ததும்.. இன்று நடப்பதும்! எந்த பங்குகள் ஏறுமுகத்தில்?

Published On:

| By Aara

நேற்று (மே 13) திங்கள்கிழமை வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமாக ஓரளவு லாபத்துடன் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை முடிவடைந்தது.
நேற்றைய நடப்பையும் இன்றைய நகர்வையும் பார்ப்போம்…
திங்கள்கிழமை காலை  நான்காவது கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியிருந்த நிலையில்… கடும் சரிவுகளுடன் தொடங்கியது வர்த்தகம்.  மதியம்  வாக்குப் பதிவு சதவிகிதம் கொஞ்சம் நம்பிக்கை தருவதாக இருந்த நிலையில்  மதியத்துக்கு மேல் வர்த்தகம் மெல்ல மெல்ல  உயரத்தொடங்கியது. வர்த்தக இறுதியில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 22104.05 புள்ளியிலும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 72776 புள்ளியிலும் முடிவடைந்தது.
ஆட்டோ, பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் பொருள்கள் மற்றும் மீடியா  துறை பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகமாகியது.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், தேவிஸ் லேபரட்டரீஸ், அதானி போர்ட்ஸ் செஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டித் தந்தன.
டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பிபிசிஎல், ஓஎன்ஜிசி மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் அதிக இழுபறிகளாக இருந்தன.
ஆதித்ய பிர்லா கேபிடல் நிறுவனம் Q4 நிகர லாபம் 1,250 கோடி ஈட்டியதாக அறிவித்துள்ள நிலையில் இதன் பங்குகள் 2.91% உயர்ந்தது.
வேதாந்தா நிறுவனம் FPO ஈக்விட்டி பங்குகள் மூலம் நிதி திரட்ட உள்ளதாக‌ தெரிவித்துள்ளது.
டிஎல்எஃப் நிறுவனம் 4வது காலாண்டில் 921 கோடி ரூபாய் லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
ஐனாக்ஸ் நிறுவனம் 4வது காலாண்டில் 44 கோடி ரூபாய் லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Zomato மார்ச் காலாண்டில் 175 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 4% வரை குறைந்து 196.65 ரூபாயில் முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அமர்வில் சுமார் 2% இறங்கியது.
இன்று கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள்…
பார்தி ஏர்டெல், சீமென்ஸ், ஸ்ரீ சிமெண்ட், கோல்கேட் பால்மோலிவ் (இந்தியா), ஓபராய் ரியாலிட்டி, ஏஐஏ இன்ஜினியரிங், அப்பல்லோ டயர்ஸ், அபார் இண்டஸ்ட்ரீஸ், ரேடிகோ கைதான், தேவயானி இன்டர்நேஷனல், ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்ட் எனர்ஜி, பிவிஆர் ஐநாக்ஸ், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், சைடுஸ், இந்தியா, சைடுஸ்  ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ், ஜூபிலண்ட் இங்க்ரீவியா, VMART ரீடெய்ல், தைரோகேர் டெக்னாலஜிஸ், சாகர் சிமெண்ட்ஸ், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், பதஞ்சலி ஃபுட்ஸ் BASF இந்தியா, BLS இன்டர்நேஷனல், கிர்லோஸ்கர் பிரதர்ஸ். ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் கவனம் செலுத்துகிறது.
பார்தி ஏர்டெல், சீமென்ஸ், கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா), பிஏஎஸ்எஃப் இந்தியா, அப்பல்லோ டயர்ஸ் மற்றும் பிவிஆர் ஐநாக்ஸ் ஆகிய 97 நிறுவனங்கள் இன்று நான்காவது காலாண்டிற்கான நிதி முடிவுகளை அறிவிக்க உள்ளன.
இன்று காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 189.54 புள்ளிகளும், நிஃப்டி 61 புள்ளிகள் உயர்வுடனும் தொடங்கியது;  ஹிண்டால்கோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் லாபத்துடன் தொடங்கின.
கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு ஐரோப்பாவில் இருந்து  சுமார் ரூ 1,000 கோடி ஆர்டரை பெற்றுள்ள நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 5% அளவு உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.51 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது.
மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share