அதிமுகவில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பி உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 16-ந் தேதி (நாளை மறுநாள்) டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, “செங்கோட்டையனை தொடர்ந்து டிடிவி தினகரனையும் அமித்ஷா அழைத்துப் பேச இருக்கிறாராம். இந்த சந்திப்புகளுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து, “பிரிந்து சென்றவர்கள் விவகாரத்தில் இறுதி முடிவு என்னதான் எடுக்கப் போறீங்க?” என கேள்வி கேட்கும் பாஜக. அப்போதும், இதேபோல எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டினால்.. ‘நடக்க வேண்டிய அத்தனையும் நடக்கும்” என நாம் கடந்த 9-ந் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம்.
தற்போது, டெல்லி பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியை அழைத்திருப்பதாகவும் வரும் 16-ந் தேதி அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் டெல்லி அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அதிமுகவின் தொண்டர்கள் அனைவருமே சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதில் விரும்பவில்லை. அதிமுகவின் மூத்த தலைவர்களும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். டெல்லிக்கு போனாலும் சென்னையில் பாஜக தலைவர்களை சந்தித்தாலும் இந்த விஷயத்தை அழுத்தம் திருத்தமாகவே எடப்பாடி பழனிசாமி முன்வைப்பார்.. அதிமுக தொண்டர்களின் கருத்தைதான் அவர் பிரதிபலிப்பார் என்கின்றன.
