பொங்கலுக்கு பின் தவெகவிற்கு திருப்புமுனையாக அமையும் என்று அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அரசியலில் இறங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு சற்றே தேக்கம் அடைந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 80 நாட்கள் கடந்த நிலையில் டிசம்பர் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு சரளை பகுதியில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த செங்கோட்டையன் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்டி இருந்தார்.
இந்த நிலையில் வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க. கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இடம் பெற உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 20) கோவை விமான நிலையத்தில் தவெக மாநில நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த வியூகம் மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “எங்களைப் பொறுத்த வரையிலும் 2026 பொங்கல் பண்டிகை நிறைவடைந்த பிறகு தவெகவுக்கு திருப்புமுனையாக இருக்கும். அது எப்படி இருக்கும் என்பதை நாடே வியந்து பார்க்கும்.” என்று சஸ்பென்ஸ் வைத்து பேசி உள்ளார்.
