தவெகவில் இணைய போகிறீர்களா என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவிக்காமல் செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கினார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்தசூழலில் செங்கோட்டையன் தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வரும் நவம்பர் 27ஆம் தேதி விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைகிறார் என்று மின்னம்பலத்தில் நேற்று (நவம்பர் 24) செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 25) மாலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார் செங்கோட்டையன்.
அப்போது அவர், “50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இந்த இயக்கத்துக்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு… உறுப்பினராக இருக்க கூடாது என நினைத்து நீக்கியிருக்கிறார்கள்.
இது மன வேதனையாக இருக்கிறது. இப்போது எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை” என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் நாளைய தினம் நீங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையப் போவதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
அவர் இந்த தகவலுக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
