தனக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செப்டம்பர் 5ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு எதிராக கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்து நடவடிக்கை எடுத்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து நேற்று கோபி சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்த சிலரையும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இந்த சூழலில் கோபி சட்டமன்றத் தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, பேரூர் மற்றும் வார்டு செயலாளர்கள் என சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் நேற்று நம்பியூர் பகுதியில் செங்கோட்டையனக்கு ஆதரவாக தங்களுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்து பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினர்.
இரண்டாவது நாளாக இன்றும் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினர்.
இந்த சூழலில் கோபிசெட்டிபாளையத்தில் இன்று (செப்டம்பர் 7) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் வந்து என்னை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி” என கூறியிருந்தார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், “செங்கோட்டையனின் அனைத்து முயற்சிக்கும் நான் ஆதரவு தெரிவிப்பேன். பத்து நாட்கள் அவர் கெடு கொடுத்திருக்கிறார். அது முடிந்ததும் அனைவரையும் அழைத்து பேசுவார் என்று நம்புகிறேன். நிச்சயம் அவரை நான் சந்தித்து பேசுவேன் ”என்று கூறியிருந்தார்.
அதுபோல செங்கோட்டையன் மீது நடவடிக்கைய எடுத்த எடப்பாடி பழனிசாமியின் செயல் சிறு பிள்ளைத்தனமானது என்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கூறியிருந்தார்.
நாளை மறுநாள் முக்கிய நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
