சட்டமன்றத்தில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை தவிர்த்து இன்று (மார்ச் 15) சபாநாயகரை சந்தித்தது ஏன் என்பது தொடர்பாக செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். sengottaiyan reply on avoiding edappadi
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. அதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்காமல் செங்கோட்டையன் தவிர்த்தார்.
தொடர்ந்து நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாகவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்களுடன் செல்லாமல் தனது இருக்கையில் அமர்ந்திருந்த செங்கோட்டையன், சிறிது நேரம் கழித்தே வெளியேறினார்.
ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் செங்கோட்டையனின் நேற்றைய நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தையும் புறக்கணித்த செங்கோட்டையன், சபாநாயகரை சென்று சந்தித்தார்.
அவரிடம் போய் கேளுங்கள்! sengottaiyan reply on avoiding edappadi
இதுதொடர்பாக எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அவரிடம் சென்று ’ஏன் தவிர்க்கிறீர்கள்’ என்று கேளுங்கள். அவரிடம் கேட்டால்தான் என்ன காரணம் என்று தெரியும். தனிப்பட்ட பிரச்சினையை எல்லாம் இங்கு பேசாதீர்கள். நான் என்றைக்கும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் ஒரு சாதாரண தொண்டன்… தலைவன் கிடையாது” என்று எடப்பாடி ஆவேசமாக பதில் தெரிவித்தார்.
சபாநாயகரை சந்தித்தது ஏன்? sengottaiyan reply on avoiding edappadi
இந்த நிலையில் இன்று மாலை சேத்துப்பட்டில் நடைபெறும் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த செங்கோட்டையனிடம், ’ஏன் எடப்பாடியுடன் சந்திப்பை தவிர்த்து சபாநாயகரை சந்தித்தது ஏன்?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கமானது தான். இன்று கூட 6,7 அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்தோம். அப்போது என் தொகுதியில் நிலவும் சுற்றுச்சுழல் பிரச்சனைக்காக கவன ஈர்ப்பு தீர்மானத்தை வழங்கினேன்.” என தெரிவித்தபடி செங்கோட்டையன் சென்றார்.