நான் முதல்வர் பதவியையும், பொதுச் செயலாளர் பதவியையும் விட்டுக்கொடுத்ததுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகமாகத் தெரிகிறதா? என கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வரப்பாளையம், அஞ்சானூர், வேமாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் ஒரு பொற்காலமாக இருந்தது. அவரது மறைவிற்குப் பிறகு, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது தமிழகத்தில் இரண்டு பெயர்கள் தான் முன்நின்றன. ஒன்று நான், மற்றொன்று எடப்பாடி பழனிசாமி.
அப்போது நான் அவரிடம், எனக்கு முதல்வர் பதவியை விடக் கழகம் உடைந்துவிடக் கூடாது என்பதே முக்கியம் என்று கூறிவிட்டு, அனைவரும் இணைந்து பணியாற்ற வழிவகை செய்தேன். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆன பிறகும், நாம் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றுதான் நான் கூறினேன்.
ஆனால், 1989-ல் கழகத்திற்கு வந்து, அனைத்துப் பதவிகளையும் அனுபவித்துவிட்டு, இன்று கட்சிக்காக உழைப்பவர்களையே நீக்குகிறார்கள் என்றால் அதன் போக்கை நீங்களே பாருங்கள். பத்து முறை வேட்புமனுத் தாக்கல் செய்த அனுபவம் கொண்ட எனக்கு, அதில் ஒரு சிறு குறை இருக்குமா என்பது தெரியாதா? வேண்டுமென்றே என் மீது புகார் அளிக்கின்றனர். ஆனால், மனு சரியாக இருப்பதாகத் தேர்தல் நடத்தும் அலுவலரே தெரிவித்துவிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி, விஜயை ஆதரித்து, அவர் மூலமாக முதல்வராகி ஐந்தாயிரம் கோடி சம்பாதிக்கலாம் என்று நினைத்தார் அதற்கு நான் விடவில்லை அதனால் தான் என் மீது கொலை வெறியில் உள்ளார். பத்து முறை தோல்வியைக் கண்டவர்கள் இன்று என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.
கோபிசெட்டிபாளையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி என்னை துரோகி என்கிறார். நான் முதல்வர் பதவியையும், பொதுச் செயலாளர் பதவியையும் விட்டுக்கொடுத்ததுதான் அவருக்குத் துரோகமாகத் தெரிகிறதா? என்னை இந்தத் தொகுதியில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால், மக்களின் மனநிலை என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு எடை போடத் தெரியவில்லை. மக்கள் சக்தி இன்று விசில் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யத் தயாராக உள்ளனர்.
