“இந்தித் திணிப்பு வேண்டாம்” என்று தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், “சரி, நாங்கள் இந்தி வழியாகவே தமிழைச் சொல்லிக்கொடுக்கிறோம்” என்று புதிய ரூட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளது மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT).
சென்னையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், வடமாநிலத்தவர்கள் தமிழை எளிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில், இந்தி மொழியை ஒரு பாலமாகப் (Bridge Language) பயன்படுத்திப் புதிய சான்றிதழ் படிப்பை (Certificate Course) விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
திட்டம் என்ன?
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 15 நாட்களில் தமிழ்: வாரணாசியில் உள்ள மாணவர்கள் வெறும் 15 நாட்களில் இந்தி வழியாகத் தமிழைக் கற்றுக்கொள்வதற்கான சிறப்புக் கையேடு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.
- வீடியோ வகுப்புகள்: இந்தி பேசுபவர்களுக்காகத் தலா 30 நிமிடங்கள் கொண்ட 90 வீடியோ பாடங்கள் (Episodes) உருவாக்கப்பட்டுள்ளன.
- தேர்வு & சான்றிதழ்: 4 மாதப் பயிற்சிக்குப் பிறகு, ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இது முற்றிலும் இலவசம்.
ஏன் இந்த முயற்சி?
இதுகுறித்து செம்மொழி நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் கூறுகையில், “திருக்குறள் போன்ற நமது பொக்கிஷங்கள் வடமாநில மக்களைச் சென்றடைய மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. வாரணாசியில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் 5,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த முயற்சி. விரைவில் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு வழியாகவும் தமிழ் கற்பிக்கும் படிப்புகள் அறிமுகமாகும்,” என்றார்.
சாதனை இலக்கு:
- வரும் பொங்கல் திருநாளில், நீலகிரி பழங்குடியின மொழிகள் உட்பட 30 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படவுள்ளது.
- 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் உலகம் முழுவதும் 100 மொழிகளில் திருக்குறளைக் கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் மெகா இலக்கு.
“அரசியல் களத்தில் இந்தி எதிர்ப்பு இருந்தாலும், அறிவுசார் களத்தில் இந்தியை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமிழைப் பரப்புவது புத்திசாலித்தனமான நடவடிக்கை. ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் பாரதி. இங்கே நம் தமிழ் நூல்கள் பிற மொழிகளுக்குச் செல்வது தமிழுக்குக் கிடைக்கும் மகுடம்!”
