விமர்சனம் : செம்பி – பிரச்சாரம் மட்டுமே போதுமா?

Published On:

| By Kavi

sembi movie review

ஒரே பாடலில் ஓஹோவென்று புகழ் ஏணியில் ஏறுவதென்பது வழக்கமாக இயக்குனர் விக்ரமன் படங்களில் நாம் பார்த்து ரசித்த ஒரு அம்சம்.

அதேபோல, ஒரேயொரு படத்தின் மூலமாக மக்கள் மனதில் மாற்றத்தை விதைப்பதும் நிச்சயம் ரசிக்கத்தக்க ஒரு கற்பனை தான். சமூக விழிப்புணர்வை ஊட்டும் வகையில் அமைந்த திரைப்படங்கள், அப்படியொரு கற்பனைக் கடலில்தான் பார்வையாளர்களை வலை போட்டு வசப்படுத்த முயற்சித்து வருகின்றன.

அந்த வரிசையில், பாலியல் குற்றமொன்றைச் செய்தவர்களை எளிய பின்னணி கொண்ட சாதாரண மனிதர்களால் சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா என்ற கேள்வியைத் தாங்கி நிற்கிறது பிரபு சாலமனின் ‘செம்பி’.

வலிகள் நிறைந்த வாழ்க்கை!

கிட்டத்தட்ட அறுபது வயதை எட்டிய ஒரு மூதாட்டி. உழைத்து உரமேறிய உடலுடன் அவமானங்களை எதிர்கொண்டு கெட்டிப்பட்ட மனதுடன், தன் மகள் வழிப் பேத்தியை வீரமங்கையாக வளர்க்கிறார்.

எதையும் கண்டு பயப்படக் கூடாது என்று உபதேசித்து அச்சிறுமியின் குழப்பங்களை ஒவ்வொரு கணமும் அகற்றி வருகிறார். படிப்பு வாசனையே இல்லாத அந்த பெண்மணி, தன் பேத்தியின் மருத்துவர் கனவை நிறைவேற்ற முடியும் என்று உளமார நம்புகிறார்.

கிடைமட்டமாக நீளும் கோடாக இருக்கும் இவர்களது வாழ்க்கை சற்றே மேல்நோக்கிச் சரிந்து முன்னேற வாய்ப்புகள் கிடைக்குமா? இந்த கேள்விக்குப் பதில் காணும் முன்னரே, அந்த சிறுமி மூன்று இளைஞர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக நேர்கிறது.

அந்த வலியிலும் வேதனையிலும் இருந்து விடுபடுவதற்குள், அந்த புகாரை திரும்பப் பெற வேண்டுமென்று அந்த மூதாட்டிக்கு மிரட்டல் விடுக்கிறார் ஒரு காவல்துறை அதிகாரி. அதைக் கேட்டதும், தன் பேத்தியை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை சும்மா விடக் கூடாது என்று மூதாட்டி கொந்தளிக்கிறார்.

அதனால் கோபமுறும் அந்த அதிகாரி இருவரையும் தாக்குகிறார். மூதாட்டி பதிலுக்குத் தாக்க, அந்த காவல் துறை அதிகாரி படுகாயமடைகிறார்.

உயிருக்குப் பயந்து குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் பேத்தியை அழைத்துக்கொண்டு, மலையிலிருந்து சமவெளி நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறுகிறார் அந்த மூதாட்டி.

sembi movie review

அதன்பிறகு, அந்த பாட்டியையும் பேத்தியையும் பொறி வைத்து தேடுகிறது போலீஸ். அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே ‘செம்பி’யின் கதை.

திரைக்கதையின் பெரும்பகுதி ’வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை’ என்பதைச் சொல்கிறது. ‘அப்போ அதுதான் நிரந்தரமா’ என்று கேள்வி வரும்போது, அதற்குப் பதிலாகவே சில காட்சிகள் திரையில் விரிகின்றன.

காட்சி மொழி எங்கே?

முதல் அரை மணி நேரத்தில், மலைக்காற்றின் குளிர்ச்சியை அனுபவிக்க அனுமதிக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். அதன்பிறகு என்ன நினைத்தாரோ, ‘போதும் நீங்க பார்த்தது’ என்று ஒரு பேருந்துக்குள் நம்மை அடைத்து, அங்கு நிகழ்த்தப்படும் நாடகத்தை ’கண்டு ரசி’ என்கிறார்.

அதில் ஆக்‌ஷனும் கூட உண்டு. அதன்பிறகு, மீண்டும் மனம் மாறி காட்சிகளின் வழியே கதை சொல்லத் தொடங்குகிறார். ‘ஆஹா’ என்று நம் மனம் மலரும்போது, ‘அன்பு தான் எல்லாம்’ என்று இறைமொழியுடன் ‘எண்ட் கார்டு’ போட்டு, ‘போதும் நீங்க உட்கார்ந்தது’ என்று திரையரங்கை விட்டு வெளியேற்றுகிறார். அப்போதுதான், ‘பிரபு சாலமன் படமா இது’ என்ற கேள்வியே எழுகிறது.

செம்பியாக நடித்திருக்கும் நிலா நம்மை பதைபதைக்க வைக்கிறார் என்றால், ‘என்னவொரு நடிப்பு’ என்று பிரமிக்க வைத்திருக்கிறார் கோவை சரளா. ‘இம்புட்டு நாளா இவரை காமெடி பீஸா மட்டும் நினைச்சுட்டோமே’ என்று வருத்தமுற வைக்கிறார்.

’மைனா’வில் போலீஸ் கான்ஸ்டபிளாக வந்து இவ்வுலகை விமர்சித்த தம்பி ராமையா, இதில் போலீஸை விமர்சிக்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம்! அரிதாக திரையில் தென்படும் ஞானசம்பந்தன், ஆகாஷ், நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா போன்றவர்களை இதில் மீண்டும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

பேருந்து பயண காட்சிகளில் ஒவ்வொரு இருக்கையில் இருப்பவர்களும் ஒவ்வொரு குணாதிசயத்துடன் இருந்தே ஆக வேண்டுமெறு மெனக்கெட்டிருக்கிறது இயக்குனர் குழு.

ஓரளவுக்கு அது பலனளித்தாலும், அக்காட்சிகள் முழுக்க பிரச்சாரமயமாக இருப்பதை ஒப்புக்கொண்டே தீர வேண்டும். அதனாலேயே, அஸ்வின் அறிமுகமும் கூட செயற்கையாகத் தோன்றுகிறது.

அவரது கதாபாத்திரத்தின் தன்மை என்னவென்பதே விவரிக்கப்படாமல், மிகத்தட்டையாக பல கமர்ஷியல் பட நாயகர்களை ஓன்றாக்கியது போன்று வடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பீல்குட் படமாக மாறியிருக்க வேண்டிய ‘செம்பி’ மேடை நாடகம் ஆனதில் முக்கியப் பங்கு அப்பாத்திரத்திற்கு உண்டு.

அதையும் தாண்டி, போக்சோ சட்டம் எந்தவொரு குற்றவாளியையும் தப்பவிடாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருப்பது மிக முக்கியமான விஷயம்.

ஒரு பாதிப்பு நடக்கும்போது பொதுமக்களில் பலர் ஒதுங்கி நிற்பார்கள் என்று சொல்லியிருப்பதும், அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு பெருகும்போது ஆதரவு பெருகும் என்பதை உணர்த்தியிருப்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

ஆனால், பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சிறுமியோடு தோளோடு தோள் நிற்பதை விடுத்து அவருக்கு பிஸ்கட்டும் பொம்மையும் குவியும் என்று அடுத்தடுத்து பல ஷாட்களில் காட்டும்போது எரிச்சல்தான் மீதமிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எம்.ஜீவனின் காட்சிமொழி ஒரு புத்துலகத்தை காட்டியிருக்கிறது. அது படம் முழுக்கப் படர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

படத்தொகுப்பாளர் புவன், கலை இயக்குனர் விஜய் தென்னரசு, இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா மூவருமே இயக்குனரின் மந்திரச் சொற்களுக்கு கட்டுப்பட்டிருக்கின்றனர்.

காட்சிகளை கவித்துவமாக மாற்றுவதில் ஒளிப்பதிவாளர் முதல் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்றாலும், அதன் அடிப்படை தடத்தையே மாற்றும் வல்லமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உண்டு; அதனை நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டிருக்கிறார் நிவாஸ் பிரசன்னா.

இறுதிக்காட்சியில் அவர் தந்த பின்னணி இசை மட்டுமே, திரையரங்கில் இருந்து வெளிவரும்போது திருப்தியை உணரச் செய்கிறது.

sembi movie review

கொண்டாடலாமா..?

ஒரு திரைப்படம் கொண்டாடப்பட எத்தனையோ காரணங்கள் உண்டு. சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ உட்பட சமீபத்தில் வெளியான பல படங்கள், பாலியல் அத்துமீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானகரமாக உணர வேண்டியதில்லை என்று கூறின. போக்சோ சட்ட பின்னணியில் அக்கருத்தினை உரக்கப் பேசியிருக்கும் ‘செம்பி’யும் கூட, அதற்காகவே கொண்டாடப்பட வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘கார்கி’, வெறுமனே பிரச்சாரமாக அல்லாமல் காட்சிரீதியிலும் நல்லதொரு அனுபவத்தை தந்தது. அதே போன்றதொரு வாய்ப்பு அபாரமாக இருந்தபோதும், ஒரு நாடகம் அல்லது மேடைப்பேச்சு அனுபவத்தையே பெரும்பாலான காட்சிகளில் தருகிறது ‘செம்பி’. திரைக்கதையை எழுதுவதில் கூட்டுழைப்பு வாய்த்திருந்தால், இந்த குறை தவிர்க்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

ஏற்கனவே ‘காடன்’ படத்திலும் இதே போன்றதொரு அனுபவத்தை தந்திருந்தார் பிரபு சாலமன்; இதில் கோவை சரளா உள்ளிட்டோரின் நடிப்பாலும், தொழில்நுட்பரீதியில் நிவாஸ் பிரசன்னா, எம்.ஜீவன் போன்றவர்களின் ஒத்துழைப்பினாலும் கொஞ்சம் தப்பிப் பிழைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதனால், ‘செம்பி’யை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து கொண்டாட முடியவில்லை என்பதே உண்மை. 

உதய் பாடகலிங்கம்

ரன்பீர்  ராஷ்மிகா இணையும் ‘அனிமல்’!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: கொந்தளித்த எடப்பாடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share