அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ

Published On:

| By Monisha

sellur raju criticize annamalai

அரசியலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் அவ்வளவு தான். எங்களுக்கு மோடி, அமித்ஷா, நட்டா தான் முக்கியம்.

என்டிஏ கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மோடி அருகில் அமர வைத்தார். மோடிக்கு தெரியும் எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை” என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு நேற்று (ஆகஸ்ட் 4) பதிலளித்த அண்ணாமலை,

“சில பேர் தங்களை அரசியல் விஞ்ஞானியாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது கருத்துக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாக நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவை தொட்டார் கெட்டார் என்று அண்ணாமலைக்கும் தெரியும்.

எங்கள் கட்சியில் உள்ளவர்களை விமர்சித்தால் எதிர்விமர்சனங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக ஏற்படும்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் அண்ணாமலையை விமர்சித்துள்ளார் செல்லூர் ராஜூ.

அவர், “பாஜக ஒரு தேசிய கட்சி என்பதால் கூட்டணி உட்பட முக்கிய முடிவுகளை எல்லாம் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா முக்கியம் என்றேன்.

அரசியல் விஞ்ஞானிக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரே ஆண்டில் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.

ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆனேன்.

அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், இன்றைக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கிறேன்.

நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தன. என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்குக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நன்றாக தெரியும்.

என்னைப் பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துகளை நான் பொருட்படுத்துவதில்லை. எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம்.

மேலும் தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான். எனவே அதிமுகவை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

தமிழ்நாடு தலையாட்டி பொம்மையல்ல: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

ஆந்திராவில் கலவரம்: பேருந்து சேவைகள் நிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share