”திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலால் அல்ல” என அமைச்சர் சேகர் பாபு இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளார். sekarbabu reply to annamalai on deaths in temple
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த 16ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்ற ஜவுளி வியாபாரி தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அவர் தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதே போன்று ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோயிலுக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்ற பக்தர் இன்று அதிகாலை தரிசனம் செய்வதற்காக சென்றார். ஆனால் வரிசையில் நின்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோயில் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ் தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சேகர்பாபு பொறுப்பேற்க வேண்டும்! sekarbabu reply to annamalai on deaths in temple
அடுத்தடுத்த இரண்டு நாட்களில் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்ற இரு பக்தர்கள் உயிரிழந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதில், “கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காத நிலையில், இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
கூட்ட நெரிசல் காரணம் அல்ல! sekarbabu reply to annamalai on deaths in temple
அதில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் (16.03.2025) சுவாமி தரிசனம் செய்ய வருகைதந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்ற போது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.
அதேபோன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இன்று (18.03.2025) விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இக்கோயில்கள் உள்ளிட்ட 17 கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த அடியால் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை” என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.